Published : 12 Jun 2015 08:49 AM
Last Updated : 12 Jun 2015 08:49 AM

காலிக் குடங்களுடன் பெண்கள் சாலை மறியல்

மேல்நிலை நீர்த்தேக்கத் தொட்டி யின் மோட்டாரில் ஏற்பட்ட பழுதால், ஒரு வாரமாக குடிநீர் விநியோகம் தடைபட்டுள்ளதாக குற்றம்சாட்டி கிராம மக்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர்.

திருவள்ளூர் அருகே உள்ளது பிரயாங்குப்பம் ஊராட்சி. இந்த ஊராட்சி பகுதியில் 1200-க்கும் மேற்பட்டோர் வசித்து வருகின்றனர். இவர்களுக்கு, மேல்நிலை நீர்த் தேக்கத் தொட்டி மூலம் ஊராட்சி நிர்வாகம் குடிநீர் விநியோகித்து வருகிறது.

கடந்த ஒரு வாரத்துக்கு முன்பு, மேல்நிலை நீர்த்தேக்கத் தொட்டியின் மின்சார மோட்டார் பழுதானது. ஊராட்சி நிர்வாகம் பழுதை சரி செய்யாததால் குடிநீர் விநியோகம் தடைபட்டது. இதுகுறித்து, கடம்பத்தூர் ஊராட்சி ஒன்றிய அதிகாரிகளிடம் முறையிட்டும் பலனில்லை என பொதுமக்கள் புகார் தெரிவித்துள்ளனர்.

இந்நிலையில், பிரயாங்குப்பம் பகுதியைச் சேர்ந்த பெண்கள் 50-க்கும் மேற்பட்டோர் நேற்று, பேரம்பாக்கம்- திருவள்ளூர் நெடுஞ்சாலையில் காலிக் குடங் களுடன் திடீர் சாலை மறியலில் ஈடுபட்டனர். தகவலறிந்து திருவள்ளூர் தாலுக்கா போலீஸார் மற்றும் கடம்பத்தூர் ஊராட்சி ஒன்றிய அதிகாரிகள் பொது மக்களை சமாதானப்படுத்தினர்.

மேல்நிலை நீர்த்தேக்கத் தொட்டியின் பழுதான மின் மோட்டாரை மாற்றி விட்டு, புதிய மின் மோட்டாரை பொருத்த நடவடிக்கை எடுப்பதாக உறுதியளித்தனர். இதையடுத்து, சாலை மறியலை கைவிட்டு பொதுமக்கள் கலைந்து சென்றனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x