Published : 30 Jun 2015 07:51 AM
Last Updated : 30 Jun 2015 07:51 AM

பொறியியல் கல்லூரி மாணவரின் பிரேதப் பரிசோதனை அறிக்கை உயர் நீதிமன்றத்தில் தாக்கல்

நாமக்கல் மாவட்டம், திருச்செங் கோட்டில் தனியார் பொறியியல் கல்லூரி மாணவர் கோகுல் ராஜ் கவுரவக் கொலை செய்யப் பட்டதாகக் கூறப்படும் வழக்கில், உயர் நீதிமன்ற உத்தரவுப்படி அவரது பிரேதப் பரிசோதனை அறிக்கையை உயர் நீதிமன்றத்தில் நேற்று சமர்ப் பிக்கப்பட்டது.

திருச்செங்கோட்டில் உள்ள தனியார் பொறியியல் கல்லூரியில் படித்த கோகுல்ராஜ் கடந்த 23-ம் தேதி சுவாதி என்ற மாணவியுடன் வெளியே சென்றவர் வீடு திரும்பவில்லை.

கோகுல்ராஜ் கடத்தி செல்லப்பட்டு கொலை செய்யப்பட்டதாக கூறப் பட்டது. இந்த நிலையில், கோகுல்ராஜ் உடல் ஈரோடு அருகே தலையில்லாத நிலையில் மீட்கப்பட்டது. கோகுல்ராஜ் கவுரவக் கொலை செய்யப்பட்டிருக்கலாம் என்று சந்தேகப்படுவதால் அவரது உடலை அரசு மருத்துவர்கள் கொண்ட குழுதான் பிரேதப் பரிசோதனை செய்ய வேண்டும் என்று உத்தரவிடக் கோரி பார்த்திபன் என்பவர் உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார்.

உயர் நீதிமன்ற நீதிபதிகள் எஸ்.தமிழ்வாணன், சி.டி.செல்வம் ஆகியோர் கொண்ட அமர்வு இவ்வழக்கை விசாரித்து, அரசு மருத்துவர்கள் மற்றும் மனுதாரர் கோரும் டாக்டர் சம்பத்குமாரைக் கொண்டு கோகுல்ராஜ் உடலைப் பிரேதப் பரிசோதனை செய்து அதன் அறிக்கையை நீதிமன்றத்தில் தாக்கல் செய்ய உத்தரவிட்டனர்.

அதன்படி, கோகுல்ராஜின் பிரேதப் பரிசோதனை அறிக்கை நீதிமன்றத்தில் தாக்கல் செய் யப்பட்டது. இதையடுத்து வழக்கு விசாரணையை ஜூலை 6-ம் தேதிக்கு தள்ளிவைத்து நீதிபதிகள் உத்தரவிட்டனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x