Published : 01 Jun 2015 10:40 AM
Last Updated : 01 Jun 2015 10:40 AM

பேச்சிப்பாறை, பெரியாறு அணைகளிலிருந்து தண்ணீர் திறக்க முதல்வர் உத்தரவு

கன்னியாகுமரி மாவட்டம் பேச்சிப்பாறை, தேனி மாவட்டம் பெரியாறு அணைகளில் இருந்து பாசனத்துக்காக நாளை (ஜூன் 2-ம் தேதி) முதல் தண்ணீர் திறக்க முதல்வர் ஜெயலலிதா உத்தரவிட்டுள்ளார்.

இது தொடர்பாக அவர் பிறப்பித்துள்ள உத்தரவில், "கன்னியாகுமரி மாவட்டம், பேச்சிப்பாறை பெருஞ்சாணி, சித்தார் ஐ மற்றும் சித்தார் 2 அணைகளிலிருந்து கோதையாறு மற்றும் பட்டணங்கால் பாசனத்திற்காக தண்ணீர் திறந்து விடுமாறு வேளாண் பெருங்குடி மக்களிடமிருந்து கோரிக்கைகள் வந்துள்ளன.

வேளாண் பெருமக்களின் வேண்டுகோளினை ஏற்று, கன்னியாகுமரி மாவட்டம், பேச்சிப்பாறை பெருஞ்சாணி, சித்தார் ஐ மற்றும் சித்தார் 2 அணைகளிலிருந்து கோதையாறு மற்றும் பட்டணங்கால் பாசனத்திற்காக 2.6.2015 முதல் தண்ணீர் திறந்து விட ஆணையிட்டுள்ளேன்.

இதனால், கன்னியாகுமரி மாவட்டத்தில் கோதையாறு மற்றும் பட்டணங்கால் பாசனப் பகுதிகளில் உள்ள 79,000 ஏக்கர் நிலங்கள் பாசன வசதி பெறும் என்பதை நான் மகிழ்ச்சியுடன் தெரிவித்துக் கொள்கிறேன்.

அதேபோல், தேனி மாவட்டம், கம்பம் பள்ளத்தாக்கு இருபோக ஆயக்கட்டு பகுதிகளுக்கு முதல் போக சாகுபடிக்காக பெரியாறு அணையிலிருந்து தண்ணீர் திறந்து விடுமாறு வேளாண் பெருங்குடி மக்களிடமிருந்து கோரிக்கைகள் வந்துள்ளன.

வேளாண் பெருமக்களின் வேண்டுகோளினை ஏற்று, தேனி மாவட்டம், கம்பம் பள்ளத்தாக்கு இருபோக ஆயக்கட்டு பகுதிகளுக்கு முதல் போக சாகுபடிக்காக பெரியாறு அணையிலிருந்து 2.6.2015 முதல் தண்ணீர் திறந்து விட ஆணையிட்டுள்ளேன்.

இதனால், தேனி மாவட்டத்தில் உள்ள தேனி, உத்தமபாளையம் மற்றும் போடிநாயக்கனூர் வட்டங்களிலுள்ள 14,707 ஏக்கர் நிலங்கள் பாசன வசதி பெறும் என்பதை நான் மகிழ்ச்சியுடன் தெரிவித்துக் கொள்கிறேன்" எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x