Published : 01 Jun 2015 12:31 PM
Last Updated : 01 Jun 2015 12:31 PM
உயர் மின் அழுத்த மின் இணைப்புகளுக்கு உச்சகட்ட நேரத்தில் விளக்கு மற்றும் பாதுகாப்புக்காக 10 சதவீதம் மட்டுமே மின்சாரம் உபயோகிக்கலாம் என்ற 90 சதவீத மின் கட்டுப்பாடும் வரும் 5.6.2015 முதல் 30.9.2015 வரை தளர்த்திட முதல்வர் ஜெயலலிதா உத்தரவிட்டுள்ளார்.
இது தொடர்பாக அரசு வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில், "முதல்வர் ஜெயலலிதா மேற்கொண்ட பல்வேறு திட்டங்களின் காரணமாக தமிழகத்தின் மின் நிலைமை சீரடைந்துள்ளது. மின் வெட்டு என்பது பழங்கதையாய்ப் போனது.
கடந்த நான்காண்டுகளில் 4991.5 மெகாவாட் அளவிற்கு கூடுதல் மின்சாரம் பெறப்பட்டுள்ளது.
முதல்வர் உத்தரவின்படி வீடு மற்றும் ஏனைய தாழ் மின்னழுத்த மின்னிணைப்புகளுக்கு இருந்து வந்த வரையறுக்கப்பட்ட மின்தடை கடந்த 1.6.2014 முதல் முற்றிலுமாக நீக்கப்பட்டுள்ளது.
உயர் அழுத்த தொழிற்சாலை மற்றும் வணிக மின் இணைப்புகளுக்கு உச்சகட்ட நேரம் தவிர்த்த மற்ற நேரங்களில் 20 சதவீதமும், உச்சகட்ட நேரத்தில் (மாலை 6.00 மணி முதல் இரவு 10.00 மணி வரை) 90 சதவீதமும் மின் கட்டுப்பாடுகள் தற்போது நடைமுறையில் உள்ளன.
இந்நிலையில், உயர் அழுத்த தொழிற்சாலை மற்றும் வணிக மின் இணைப்புகளுக்கு உச்சகட்ட நேரம் தவிர்த்த மற்ற நேரங்களில் அமலில் இருந்து வரும் 20 சதவீத மின் கட்டுப்பாடு வரும் 5.6.2015 முதல் முற்றிலுமாக நீக்க முதல்வர் உத்தரவிட்டுள்ளார்.
மேலும், உயர் மின் அழுத்த மின் இணைப்புகளுக்கு உச்சகட்ட நேரத்தில் (மாலை 6.00 மணி முதல் இரவு 10.00 மணி வரை) விளக்கு மற்றும் பாதுகாப்புக்காக 10 சதவீதம் மட்டுமே மின்சாரம் உபயோகிக்கலாம் என்ற 90% மின் கட்டுப்பாடும் வரும் 5.6.2015 முதல் 30.9.2015 வரை தளர்த்திடவும் முதல்வர் ஜெயலலிதா உத்தரவிட்டுள்ளார்" எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT