Last Updated : 12 Jun, 2015 08:46 PM

 

Published : 12 Jun 2015 08:46 PM
Last Updated : 12 Jun 2015 08:46 PM

புனேயில் இருந்து நெல்லைக்கு வரும் பல்லாரி: உள்ளூரில் சாகுபடி இல்லாததால் விலையும் அதிகம்

திருநெல்வேலி மாவட்டத்தில் வெயில் சுட்டெரிப்பதால் பல்லாரி சாகுபடி மேற்கொள்ளப் படவில்லை. இதனால் புனே, நாசிக் போன்ற வெளிமாநிலங்களில் இருந்து லாரிகளில் பல்லாரி கொண்டுவரப்படுகிறது.

திருநெல்வேலி மாவட்டத்தில் ஆலங்குளம், பாவூர்சத்திரம் போன்ற மாவட்டத்தின் மேற்கு பகுதிகளில் பல்லாரி சாகுபடியில் குறிப்பிட்ட சில மாதங்களுக்கு விவசாயிகள் ஈடுபடுகிறார்கள். ஆண்டில் குறிப்பிட்ட 3 மாதங்களுக்கு மட்டுமே பல்லாரி சாகுபடி உள்ளூரில் இருக்கும்.

பல்லாரி சாகுபடிக்கு ஓரளவுக்கு தண்ணீரும் தேவைப்படும். ஆனால் தற்போதைய வெயிலால் பல்லாரி சாகுபடியில் இங்குள்ள விவசாயிகள் அதிகளவில் ஆர்வம் காட்டவில்லை. இதனால் காய்கறி சந்தைகளில் பல்லாரி தேவைக்கு வியாபாரிகள் வெளி மாநிலங்களை நம்பியிருக்கிறார்கள்.

தற்போது மஹாராஷ்டிரா மாநிலம் புனே, நாசிக், கோலாப்பூர் மற்றும் கர்நாடக மாநிலங்களில் இருந்து பல்லாரி மூட்டைகள் திருநெல்வேலி மாவட்ட சந்தைகளுக்கு கொண்டு வரப்படுகின்றன. வெளிமாநிலங் களில் இருந்து கொண்டு வரப்படுவதால் பல்லாரி விலையும் அதிகமாகவே இருக்கிறது.

திருநெல்வேலி டவுன் நயினார் குளம் காய்கறி மார்க்கெட் வியாபாரி ஆர்.செல்வராஜ் கூறியதாவது: வெளிமாநிலங் களில் இருந்து முதல்தரமான பல்லாரி கொள்முதல் செய்து இங்கு விற்பனை செய்கிறோம். கொள்முதல் செய்யும்போது கிலோவுக்கு ரூ.26 முதல் ரூ.28 வரை என்று விலை கொடுத்து வாங்கப்படுகிறது.

லாரி வாடகை, எரிபொருள் செலவு உள்ளிட்டவற்றால் திருநெல்வேலியில் மொத்த கொள்முதல் கடைகளில் கிலோ வுக்கு ரூ. 32 முதல் ரூ.34 வரை விற்பனை செய்கிறோம். அதுவே சிறிய கடைகளில் கிலோ ரூ.40 வரை விற்பனை செய்யப்படுகிறது, என்றார் அவர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x