Published : 29 Jun 2015 03:49 PM
Last Updated : 29 Jun 2015 03:49 PM

சுற்றுச்சூழலை பாதுகாக்கக் கோரி சைக்கிளில் 45,000 கி.மீ. பயணம் செய்து விழிப்புணர்வு பிரச்சாரம் செய்யும் விவசாயி

சுற்றுச்சூழலை பாதுகாக்கக்கோரி சைக்கிளில் இதுவரை 45,000 கி.மீ. பயணம் செய்துள்ள நாமக்கல் விவசாயி நேற்று முதுகுளத்தூர் மற்றும் சுற்றியுள்ள கிராமங்களில் விழிப்புணர்வுப் பிரச்சாரம் செய்தார்.

நாமக்கல் மாவட்டம், என்.புதுப்பட்டியைச் சேர்ந்தவர் அன்பு சார்லஸ்(53). விவசாயியான இவர் எம்.ஏ. சமூகவியல் முதுகலைப் பட்டம் பெற்றவர். இவர் நீர், நிலம், காற்று உள்ளிட்ட இயற்கை வளங்கள் சுற்றுச்சூழலால் மாசு படுவதை தடுக்கும் நோக்கில் சைக்கிளில் 45,000 கி.மீ. பயணம் செய்து விழிப்புணர்வு பிரசாரம் செய்து வருகிறார்.

நாமக்கலில் ஏப்ரல் 22-ம் தேதி அன்று சைக்கிளில் விழிப்புணர்வு பிரச்சாரத்தை தொடங்கினார். மகாராஷ்டிரா, குஜராத், ராஜ ஸ்தான், ஹரியானா, பஞ்சாப், ஜம்மு-காஷ்மீர், உத்திரப்பிரதேசம், பிகார் உட்பட இருபதுக்கும் மேற்பட்ட மாநிலங்களில் பிரச்சாரத்தை முடித்துள்ளார்.

தமிழகத்தின் பல மாவட்டங்களில் சுற்றிய அன்பு சார்லஸ் கடந்த ஒருவாரமாக ராமநாதபுரம் மாவட்டம், சிக்கல், வாலிநோக்கம், சாயல்குடி, கடலாடி ஆகிய பகுதிகளில் சைக்கிளில் சுற்றுப்பயணம் செய்து பொதுமக்களிடம் பிளாஸ்டிக் பொருட்களை பயன்படுத்தாதீர், புகை ஏற்படுத்தி மாசு ஏற்படுத்தும் வாகனங்களை பயன்படுத்தாதீர் உள்ளிட்ட கருத்துக்களை கூறி விழிப்புணர்வு பிரச்சாரம் செய்து வருகிறார்.

முதுகுளத்தூரில் நேற்று பிரச்சாரம் செய்த அன்பு சார்லஸ் செய்தியாளர்களிடம் கூறியதாவது:

இந்தியாவில் இதுவரை 20 மாநிலங்களில் 5 லட்சம் கிராமங்களுக்கு 45 ஆயிரம் கி.மீ. தூரம் சைக்கிளில் சென்று விழிப்புணர்வுப் பிரச்சாரம் செய்துள்ளேன். இயற்கை வளங்கள் அழிக்கப்படுவதால் தண்ணீர் தட்டுப்பாடு ஏற்படுகிறது, எரிபொருள் பயன்படுத்தும் வாக னங்களை தவிர்த்து சுற்றுப்புறத்தை மாசுபடுத்தாத வாகனங்களை அதிகமாகப் பயன்படுத்தலாம்.

அனைவரும் உடல் நலமாக இருக்க சைக்கிளில் பயணம் செய்வது நல்லது. இதற்காக ஆங்கிலம், மலையாளம், தெலுங்கு, இந்தி, உருது போன்ற மொழிகளை கற்றுக் கொண்டு மக்களுக்கு பிரச்சாரம் செய்து வருகிறேன். என் உயிர் இருக்கும் வரை இப்பிரச்சாரம் செய்வேன்.

பிகார் எல்லைப் பகுதியில் பிரச்சாரம் செய்தபோது நக்சலைட்டுகள் என்னை உளவுப் பிரிவு போலீஸார் என நினைத்து 10 நாள்கள் சிறைபிடித்து வைத்திருந்தனர். பத்திரிகைகளில் வெளியான செய்தியைப் பார்த்து பின்னர் என்னை விடுவித்தனர் என்றார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x