Published : 09 Jun 2015 07:38 AM
Last Updated : 09 Jun 2015 07:38 AM

30 ஆண்டுகளில்.. ஹெல்மெட் உத்தரவுகள்

வாகன ஓட்டிகளுக்கு ஹெல்மெட் கட்டாயம்.. பின்னால் உட்கார்பவரும் அணியவேண்டும்.. ஹெல்மெட் சோதனை என்ற பெயரில் மக்களுக்கு இடையூறு ஏற்படுத்தக்கூடாது.. என்று கடந்த சில ஆண்டுகளில் விதவிதமான உத்தரவுகள் பிறப்பிக்கப்பட்டுள்ளன.

இருசக்கர வாகனம் ஓட்டுபவர் ஹெல்மெட் அணியவேண்டும் என்று தமிழக அரசு 1985 மார்ச் 8-ல் உத்தரவிட்டது. புதிய மோட்டார் வாகனச் சட்டம் 1988-ல் மத்திய அரசால் வெளியிடப்பட்டு, 1989-ல் அமல்படுத்தப்பட்டது. ஹெல்மெட் அணிவது கட்டாயம் இல்லை என்று 1989 ஜூன் 6-ல் தமிழக உள்துறை அரசாணையில் குறிப்பிடப்பட்டது.

2007 பிப்ரவரியில் போக்குவரத்துத் துறை கமிஷனர் எழுதிய கடிதத்தில் வாகன நெருக்கடியை குறிப்பிட்டு ஹெல்மெட் கட்டாயமாக்கப்பட வேண்டும் என்றார்.

இதை பரிசீலித்த தமிழக அரசு முந்தைய அரசாணையை ரத்து செய்து, ஹெல்மெட்டை கட்டாயமாக்கியது. கூடவே, பைக்கில் பின்னால் அமர்ந்து செல்பவர்களுக்கும் ஹெல்மெட்டை கட்டாய மாக்கியது.

2007 ஜூன் 1 முதல் சென்னை, மதுரை, கோவை, திருச்சி, சேலம், நெல்லை ஆகிய 6 மாநகராட்சிகளிலும், ஜூலை 1 முதல் மற்ற பகுதிகளிலும் இந்த உத்தரவை அமல்படுத்த வேண்டும் என்று அரசாணையில் கூறப்பட்டது. இதையடுத்து, தமிழகம் முழுவதும் ஹெல்மெட் கண்காணிப்பு வேட்டையில் போலீஸார் தீவிரமாக இறங்கினர். சென்னை உயர் நீதிமன்றமும் ஹெல்மெட்டை கட்டாயமாக்கி உத்தரவிட்டது.

இதற்கு, வாகன ஓட்டிகள் மத்தியில் அதிருப்தியுடன் புகாரும் எழுந்தது. அப்போதைய முதல்வர் கருணாநிதி, ‘‘ஹெல்மெட் அணிந்து செல்ல வேண்டும் என்பது கோர்ட் ஆணைப்படியும், உயிர் பாதுகாப்புக்காகவும் ஒரு தேவை என்ற அளவில் எடுத்துக்கொள்ள வேண்டும். அதை தீவிரமாக நடைமுறைப்படுத்துவதன் மூலம் பொதுமக்களுக்கு இடையூறு ஏற்படுத்தக் கூடாது’’ என்றார். இதன் பிறகு, ஹெல்மெட் கட்டுப்பாடு தளர்ந்தது.

2011-ல் அதிமுக ஆட்சி வந்ததும், சென்னையில் போக்குவரத்து போலீஸ் கூடுதல் கமிஷனராக நியமிக்கப்பட்ட சஞ்சய் அரோரா ஜூன் 28 முதல் ஹெல்மெட் கட்டாயம் என்று உத்தரவிட்டார்.

ஹெல்மெட் மீண்டும் கட்டாய மாக்கப்பட்டது. அப்போது போக்குவரத்து தொடர்பான அபராதங்களுக்கு இ-செலான் முறை அறிமுகப்படுத்தப் பட்டதால், விதிகள் கடுமையாக அமல்படுத்தப்பட்டன. ஹெல் மெட் அணியாதவர்கள் அபராதம் கட்ட நேர்ந்தது. ஹெல்மெட் பயன்பாடு அதிகரித்தது.

மதுரை உயர் நீதிமன்ற கிளையில் 2014 மார்ச் 1-ல் ஒரு பொதுநல வழக்கின் மீதான தீர்ப்பில் தமிழகத்தில் ஹெல்மெட்டை கட்டாயமாக்கி உத்தரவிடப்பட்டது.

இதையடுத்து, ஜூலை 1 முதல் வாகன ஓட்டிகளுக்கு ஹெல்மெட் கட்டாயம் என்று சென்னை உயர் நீதிமன்றம் மீண்டும் உத்தரவிட்டுள்ளது.

‘‘ஒத்துழைப்பு தாருங்கள்’’

இதுபற்றி போக்குவரத்து போலீஸ் அதிகாரிகள் கூறியபோது, ‘‘தமிழகம் முழுவதும் ஹெல்மெட் தொடர்பான வழக்குகள் தினமும் ஆயிரக்கணக்கில் பதியப்படுகின்றன. அபராதமும் விதிக்கிறோம்.

எங்கள் பணியில் தொய்வி ல்லை. பொதுமக்கள் ஒத்துழைப்பது இல்லை. அவர்கள் தவறு செய்துவிட்டு தப்பிக்கப் பார்க்கின்றனர். விபத்துகளும், உயிர்ச் சேதங்களும் அதிகரித்து வருவதை கருத்தில் கொண்டே இந்த நடவடிக்கை எடுக்கப்படுகிறது. இது தங்கள் நலனுக்குதான் என்பதை உணர்ந்து, பொதுமக்கள் ஒத்துழைப்பு தரவேண்டும்’’ என்றனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x