Published : 18 Jun 2015 08:16 AM
Last Updated : 18 Jun 2015 08:16 AM
தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மான கழகத்துடன் என்எல்சி நிறுவனம் இணைந்து, ‘என்எல்சி தமிழ்நாடு மின் நிறுவனம்’ கூட்டு முயற்சி நிறுவனத்தை உருவாக்கி அதன் மூலமாக தூத்துக்குடியில் நிலக்கரியில் இயங்கும் 1,000 மெ.வா. திறன்கொண்ட அனல் மின் நிலையத்தை அமைத்து வருகிறது. அங்கு, தலா 500 மெ.வா. மின் உற்பத்தி திறன்கொண்ட 2 பிரிவுகள் உள்ளன. மணிக்கு 10 லட்சம் யூனிட் மின்சாரத்தை உற்பத்தி செய்யும் திறன்கொண்டது இந்த அனல் மின் நிலையம் என்பது குறிப்பிடத்தக்கது.
இந்த மின் நிலையத்தின் முதலாவது மின் உற்பத்திப் பிரிவு கடந்த 6-ம் தேதி முழு உற்பத்தி தகுதி பெற்றது. இரண்டாவது உற்பத்திப் பிரிவிலும் பணிகள் நிறைவடைந்து தயார் நிலையில் உள்ளது. இந்த நிலையில், தூத்துக்குடி அனல் மின் நிலையத் திட்ட செலவுகளுக்காக மத்திய பொதுத்துறை நிறுவனமான மின்நிதி நிறுவனத்திடம் இருந்து ரூ.1,184.92 கோடி கடனாக பெற ‘என்எல்சி தமிழ்நாடு மின் நிறுவன’ இயக்குநர்கள் குழு ஒப்புதல் வழங்கியது.
அதன்படி, இதற்கான ஒப்பந்தம் நேற்று முன்தினம் நெய்வேலியில் கையெழுத்தானது. என்எல்சி தமிழ்நாடு மின் நிறுவன இயக்கு நர் மற்றும் மின் நிதி நிறுவன அதிகாரிகள் இந்த ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டனர். என்எல்சி நிறுவனத்தின் புதிய திட்டங்களுக் கான நிதித்துறை பொது மேலாளர் மற்றும் என்எல்சி தமிழ்நாடு மின் நிறுவன தலைமை நிதி அதிகாரி ஆகியோர் உடனிருந்தனர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT