Last Updated : 15 Jun, 2015 08:22 AM

 

Published : 15 Jun 2015 08:22 AM
Last Updated : 15 Jun 2015 08:22 AM

தமிழக மக்களை திராவிட கட்சிகள் மாசுபடுத்திவிட்டன: ஐஜேகே நிறுவனர் பாரிவேந்தர் குற்றச்சாட்டு

தமிழக மக்களை திராவிடக் கட்சிகள் மாசுபடுத்தி வைத்துள்ளன என்று இந்திய ஜனநாயகக் கட்சியின் நிறுவனர் பாரிவேந்தர் கூறினார்.

இது தொடர்பாக ‘தி இந்து’வுக்கு அவர் அளித்த சிறப்புப் பேட்டி:

என்ன காரணத்துக்காக கட்சி தொடங்கினீர்களோ, அந்த திசையில் பயணிக்கிறதா?

சினிமா கவர்ச்சியைக் கொண்டு இத்தனை ஆண்டுகள் ஆட்சி நடத்திய திராவிடக் கட்சிகள், மது, இலவசம், சினிமா ஆகிய 3 போதைகளுக்கு மக்களை அடிமைப்படுத்தி வைத்துள்ளன. தமிழக மக்களை 2 கட்சிகளும் மாசுபடுத்திவிட்டன. எனவே, குடும்ப அரசியல் ஒழிப்பு, மது விலக்கு, ஊழலை தவிர்ப்பது, விஞ்ஞான ரீதியிலான விவசாயம், பெண்களுக்கு 50 சதவீத இடஒதுக்கீடு, இலவசங்கள் கூடாது என்ற வலுவான கொள்கைகளோடு அரசியலுக்கு வந்துள்ளோம். படித்த, சுயசிந்தனை உள்ள இளைஞர்களுக்கு அரசியல் தளத்தை உருவாக்கவே கட்சி ஆரம்பித்தோம். அந்த இலக்கை நோக்கி பயணிக்கிறோம்.

சொத்துக்களை பாதுகாக்கவே நீங்கள் கட்சி தொடங்கியதாக பேசப்படுகிறதே?

அதிகாரத்தில் உள்ளவர்களின் தொந்தரவை சமாளிக்கவும், சொத்துக்களை காப்பாற்றவுமே கட்சி ஆரம்பித்தேன் என்று சொல்வது சரியல்ல. உண்மையில் எனக்கு எந்த நெருக்கடிகளும் கிடையாது. தமிழகத்தில் 500-க்கும் அதிகமான கல்லூரிகள் உள் ளன. நெருக்கடிகளுக்காக கட்சி தொடங்குவதென்றால், 500 கட்சிகள் உருவாகியிருக்க வேண்டுமே.

கட்சி தொடங்கிய 6-வது ஆண்டி லேயே, 2021-ஐ இலக்காக சொல்கிறீர்களே?

கடந்த 5 ஆண்டுகளில் எங்கள் கட்சி மக்களிடம் ஓரளவு அறிமுகமாகியுள்ளது. தமிழகத்தில் இருக்கும் பல கட்சிகள் அதிமுக, திமுகவுடன் கூட்டணி வைத்தவர்கள். மாற்றத்தை மக்கள் யோசிக்கும்போது நாங்கள் நினைவுக்கு வருவோம்.

பணமே செலவழிக்காமல் கட்சி நடத்துவது இன்றைய சூழலில் சாத்தியமா?

நாங்கள் உடனே ஆட்சிக்கு வர வேண்டும் என்று ஆசைப்படவில் லையே. மோடி வெற்றி பெற்ற வாரணாசி தொகுதியில், சிறிய துண்டு பிரசுரத்தைக் கொடுத்து மட்டுமே வாக்கு சேகரித்தனர். எங்கள் கொள்கையை உயிர்ப்புடன் வைத்து எளிய முறைகளை பின்பற்றுவோம். சினிமாக்காரர்கள் ஆண்டது போதும் என்று மக்களும் நினைப்பார்கள்.

சினிமாவை எதிர்க்கும் நீங்கள், படங்களை தயாரிக்கலாமா?

சினிமாவை எதிர்க்கவில்லை. அதன் மீதான கவர்ச்சியைத்தான் எதிர்க்கிறேன். அறிவார்ந்த மாண வர்கள் இந்தியாவில் உழைக்க வேண்டும் என்பதை வலியுறுத்த ‘உயிருக்கு உயிராக’, இலங்கை பிரச்சினையை உணர்த்த ‘புலிப் பார்வை’ என 2 கலைப்படைப்பு களை தயாரித்தேன். வேந்தர் மூவிஸ் என்னுடையது அல்ல. அது கட்சிக்காரருடையது.

குடும்ப அரசியல் கூடாது என்று சொல்லும் நீங்கள், மகனுக்கு கட்சிப் பொறுப்பு கொடுத்துள்ளீர்களே?

ஆட்சியில் குடும்ப அரசியலை எதிர்க்கும் நாங்கள், கட்சியில் எதிர்க்கவில்லை. ஏனென்றால் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த பலர் அதிகார மையத்தில் இருந்துகொண்டு மக்களின் வரிப்பணத்தை பங்கு போடக்கூடாது என்பது எங்கள் எண்ணம். நான் ஐஜேகே வின் அரசியல் ஆலோசகராக உள்ளேன். கட்சியை முன் னெடுத்துச் செல்ல ஒருவர் தேவை என்பதால் மகனுக்கு பொறுப்பு வழங்கப்பட்டது.

தமிழகத்திலேயே உங்கள் கட்சி இன்னும் காலூன்றவில்லை. இந் நிலையில், வட மாநில தேர்தல்களில் போட்டியிடுவது ஏன்?

கடந்த 40 ஆண்டுகளாக கல்விப்பணியில் உள்ளேன். எங்கள் பல்கலைக்கழகத்தில் படித்த 80 சதவீதம் பேர் வெளி மாநிலத்தவர்கள். நான் கட்சி ஆரம்பித்ததை கேள்விப்பட்ட முன் னாள் மாணவர்கள் பலர், அவர்கள் மாநிலத்தில் நடக்கும் தேர்தலில் ஐஜேகே சார்பில் போட்டியிட விரும்பினர். உ.பி. தேர்தலில் போட்டியிட்ட அவர்களுக்கு பெரியளவில் வாக்குகள் கிடைத் தன. தொடர்ந்து பிஹாரிலும் போட்டியிட உள்ளோம்.

சமீபகாலமாக பாஜகவை விமர்சிக் கிறீர்களே, சட்டப்பேரவை தேர்தல் வரை கூட்டணி தொடருமா?

தேசிய அளவில் பாஜக மீதும் பிரதமர் மீதும் எங் களுக்கு எந்தக் குறையும் இல்லை. மோடியின் வண்டலூர் பொதுக்கூட்டத்துக்கான ஏற்பாடுகளை நானே முன்நின்று செய்தேன். தமிழக பாஜகவினர் கூட்டணி என்று கொண்டாடும் ஆட்கள் அப்போது அங்கு தலைகாட்டவில்லை. அவ் வளவு செய்த எங்களுக்கு முக்கியத்துவமில்லை. அதிமுக - பாஜக கூட்டணி என்று செய்திகள் வருகின்றன. அதை பாஜகவினர் எதிர்ப்பதில்லை. தமிழக பாஜக தனித்தன்மையுடன் நடந்து கொள்ளாவிட்டால், எங்களது தனித் தன்மையுடன் நாங்கள் செயல் படுவோம்.

இவ்வாறு பாரிவேந்தர் கூறினார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x