Published : 02 Jun 2015 09:00 PM
Last Updated : 02 Jun 2015 09:00 PM
ஆர்.கே.நகர் தொகுதி இடைத்தேர்தலுக்கான வேட்புமனு தாக்கல் நாளை தொடங்குகிறது. சென்னை ஆர்.கே.நகர் சட்டப்பேரவை தொகுதிக்கு வரும் 27-ம் தேதி நடக்கும் என தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. இதற்கான வேட்புமனு தாக்கல் நாளை தொடங்குகிறது.
தேர்தல் நடத்தும் அதிகாரி மற்றும் வேட்பு மனு தாக்கல் செய்ய வேண்டிய அலுவலகம் குறித்த அறிவிப்பு நாளை காலை வெளியாகும் என தமிழக தலைமைத் தேர்தல் அதிகாரி சந்தீப் சக்சேனா தெரிவித்துள்ளார்.
வேட்புமனுக்களை 10-ம் தேதி வரை (காலை 11 முதல் பிற்பகல் 3 மணி வரை) தாக்கல் செய்யலாம். மனுக்கள் மீதான பரிசீலனை 11-ம் தேதி நடக்கிறது. மனுக்களை வாபஸ் பெற 13-ம் தேதி கடைசி நாளாகும். அன்று மாலை இறுதி வேட்பாளர் பட்டியல் வெளியிடப்படும்.
சென்னை மாநகராட்சி தலைமை அலுவலகமான ரிப்பன் மாளிகையின் தரைதளத்தில் தேர்தல் அதிகாரிக்கான அறை தயாராகி வருகிறது.
இந்தத் தொகுதியில் அதிமுக சார்பில் முதல்வர் ஜெயலலிதா போட்டியிடுகிறார். அவர் 5-ம் தேதி வேட்பு மனு தாக்கல் செய்வார் என கூறப்படுகிறது. ஜெயலலிதாவை எதிர்த்து போட்டியிடப் போவதாக அறிவித்துள்ள சமூக ஆர்வலர் டிராபிக் ராமசாமி, முதல் நாளிலேயே (நாளை) வேட்புமனு தாக்கல் செய்யப் போவதாக கூறியுள்ளார்.
திமுக, பாமக, மதிமுக, தமாகா உள்ளிட்ட கட்சிகள் தேர்தலை புறக்கணிக்கப் போவதாக அறிவித்துள்ளன. தமிழ் மாநில கட்சி சார்பில் பால்கனகராஜ் போட்டியிடப் போவதாகவும் கம்யூனிஸ்ட், தேமுதிக சார்பிலும் வேட்பாளர்கள் நிறுத்தப்பட வாய்ப்புள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT