Published : 03 Jun 2015 04:19 PM
Last Updated : 03 Jun 2015 04:19 PM

வாணியம்பாடியில் விடுதி வார்டன் மாயம்: பசியால் தவித்த மாணவர்கள் காலி தட்டுகளுடன் சாலை மறியல்

வாணியம்பாடியில் ஆதிதிராவிடர் நல மாணவர் விடுதி வார்டன் பணிக்கு வராததால், பசியால் தவித்த மாணவர்கள் நேற்று சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

வாணியம்பாடி நியூடவுன் பகுதியில் ஆதிதிராவிடர் நல மாணவர் விடுதி உள்ளது. இங்கு 30-க்கும் மேற்பட்ட மாணவர்கள் கடந்த ஆண்டு தங்கியிருந்தனர். கோடை விடுமுறை முடிந்த நிலையில் நேற்று முன்தினம் பள்ளிகள் தொடங்கின.

இந்நிலையில், கடந்த ஆண்டு விடுதியில் தங்கியிருந்த மாணவர்களில் 17 பேர் நேற்று முன்தினம் வழக்கம்போல விடுதிக்கு திரும்பினர். முதல் நாளே விடுதிக்கு வரவேண்டிய வார்டன் அழகேசன் என்பவர் பணிக்கு வரவில்லை.

இதனால், நேற்று முன்தினம் மதிய உணவு, இரவு உணவு விடுதியில் சமைக்கவில்லை. மாணவர்கள் அவரை தொடர்புகொள்ள முடியவில்லை. வேறு வழியில்லாமல் சில மாணவர்கள் பணம் கொடுத்து ஓட்டல்களில் வாங்கி சாப்பிட்டுள்ளனர். நேற்று காலையும் டிபன் செய்யவில்லை. பசியோடு மாணவர்கள் பள்ளிக்குச் சென்றனர்.

விடுதியில் தங்கியுள்ள மாணவர்களுக்கு பள்ளியில் மதிய உணவு வழங்குவதில்லை என்பதால், நேற்று மதியம் மாணவர்கள் விடுதிக்கு திரும்பி வந்துள்ளனர். அப்போதும், வார்டன் வராததால் சமையல் செய்யவில்லை.

பசியில் தவித்த மாணவர்கள் கையில் தட்டுகளுடன் வாணியம்பாடி-ஆலங்காயம் சாலையில் திடீரென மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். மாணவர்களின் போராட்டத்துக்கு அப்பகுதி மக்களும் ஆதரவு தெரிவித்தனர்.

இதுகுறித்த தகவலின்பேரில் நகர காவல் ஆய்வாளர் பழனி மற்றும் வட்டாட்சியர் செந்தில் ஆகியோர் விரைந்து சென்றனர். போராட்டத்தில் ஈடுபட்ட மாணவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். ‘பள்ளி தொடங்கிய நிலையில் விடுதிக்கு வார்டன் வரவில்லை. சமைக்கவும் முடியவில்லை. கழிப்பறையில் தண்ணீர் இல்லை. குளிக்கவும் முடியவில்லை’ என மாணவர்கள் அடுக்கடுக்கான புகார் தெரிவித்தனர்.

இதையடுத்து, மாணவர்களுக்கு மதிய உணவு வழங்க ஆய்வாளர் பழனி ஏற்பாடு செய்தார். மேலும், அந்த வழியாகச் சென்ற நகராட்சி தண்ணீர் டிராக்டரை நிறுத்தி, விடுதிக்கு தண்ணீர் சப்ளை செய்யுமாறு கூறினார். இதையடுத்து, மாணவர்கள் தங்களது போராட்டத்தைக் கைவிட்டனர்.

இதுகுறித்து, வேலூர் மாவட்ட ஆதிதிராவிடர் நல அலுவலர் நீலவேணியிடம் கேட்டதற்கு, ‘விடுதி வார்டனுக்கு கடந்த இரண்டு நாட்களாக உடல்நிலை சரியில்லை. மருத்துவமனையில் உள்ளார். இதனை அவர் முன்கூட்டியே தெரிவித்திருந்தால் மாற்று ஏற்பாடு செய்திருக்க முடியும். அருகில் உள்ள விடுதியில் இருந்து தற்காலிகமாக வார்டன் ஒருவர் சென்றுள்ளார். மாணவர்களுக்கு தொடர்ந்து உணவு வழங்கப்படும்’ என்றார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x