Published : 04 Jun 2015 02:46 PM
Last Updated : 04 Jun 2015 02:46 PM

மீனவர்களைக் காக்க அரசு மறந்துவிட்டது: ஸ்டாலின் சாடல்

மீனவர்களை பாதுகாப்போம் என்று கொடுத்த வாக்குறுதியை அதிமுக அரசு மறந்துவிட்டது என்று திமுக பொருளாளர் ஸ்டாலின் குற்றம்சாட்டியுள்ளார்.

இதுகுறித்து ஸ்டாலின் இன்று எழுதியுள்ள முகநூல் பதிவில், ''மீனவர்களை பாதுகாப்போம் என்று கொடுத்த வாக்குறுதியை அதிமுக அரசு மறந்து விட்டது. மீனவர் பாதுகாப்பு படை அமைப்போம் என்றார்கள். நான்கு வருடங்களாகியும் அந்தப் படை இதுவரை அமைக்கப்படவில்லை.

மத்திய அரசுக்கு கடிதம் எழுதுவதோடு கடமை முடிந்து விட்டது என்று அதிமுக அரசு கருதுகிறது. ஜனவரி 2014ல் இருந்து மார்ச் 2015க்குள் 937 மீனவர்கள் கைது செய்யப்பட்டுள்ளார்கள்.

இப்போது மீன் பிடி காலம் துவங்கிய உடன் 14 மீனவர்களை இலங்கை கடற்படை கைது செய்திருக்கிறது. சவுதி அரேபிய கடற்பகுதியில் ஏழு பேரோடு மீன் பிடித்த குமரி மாவட்டம் பொழிக்கரையைச் சேர்ந்த மதிவாளன் அடையாளம் தெரியாத நபர்களால் சுட்டு கொல்லப்பட்டுள்ளார்.

நம் மாநில அரசு மீன்பிடி விதிகள் குறித்து மீனவர்களுக்கு கற்றுக் கொடுக்கவோ அல்லது அவர்களுக்கு உள்கட்டமைப்பு வசதிகளையோ செய்து கொடுக்கவும் இல்லை. மறந்து போன மற்ற வாக்குறுதிகள் போல் அல்லாமல் மீனவர் பாதுகாப்பு படை அமைப்போம் என்ற வாக்குறுதியை உடனே நிறைவேற்ற வேண்டும் என்று அதிமுக அரசை கேட்டு கொள்வதோடு கொடுத்த வாக்குறுதிகளுக்கு அதிமுக அரசு தான் பொறுப்பு என்பதை நினைவுபடுத்தவும் விரும்புகிறேன்'' என்று ஸ்டாலின் கூறியுள்ளார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x