Published : 30 Jun 2015 07:58 AM
Last Updated : 30 Jun 2015 07:58 AM
கர்நாடக மாநிலத்தில் காவிரி நீர்பிடிப்புப் பகுதிகளில் தொடர்ந்து பெய்து வரும் கனமழையால் அங்குள்ள அணைகள் வேக மாக நிரம்பி வருகின்றன. இதை யடுத்து கடந்த 23-ம் தேதி முதல் உபரி நீர் காவிரியாற்றில் வெளியேற்றப்பட்டு வருகிறது. இதனால் ஒகேனக்கல்லுக்கு நீர் வரத்து அதிகரித்துள்ளது. மேட்டூர் அணையின் நீர்மட்டம் கடந்த 5 நாட்களில் 5 அடி உயர்ந்துள்ளது.
கர்நாடக மாநில காவிரி நீர்பிடிப்பு பகுதியில் தொடர் மழை பெய்து வருவதால், கர்நாடக மாநில அணைகளில் இருந்து உபரிநீர் அதிகளவு வெளியேற்றப் படுகிறது. இடையில் சில நாட்கள் நீர் திறப்பு குறைக்கப்பட்டதால் நீர்வரத்து ஏற்ற, இறக்கமாக இருந்தது. நேற்று முன்தினம் மாலை நிலவரப்படி ஒகேனக் கல்லுக்கு விநாடிக்கு 18 ஆயிரம் கன அடி தண்ணீர் வந்து கொண்டிருந்தது. நேற்று காலையில் விநாடிக்கு 16 ஆயிரத்து 500 கனஅடி என்ற அளவில் தண்ணீர் வந்தது.
இதற்கிடையே நேற்று முன்தினம் முதல் கர்நாடக மாநிலம் கிருஷ்ணராஜ சாகர் அணையில் இருந்து விநாடிக்கு சுமார் 30 ஆயிரம் கன அடி வீதம் தண்ணீர் வெளியேற்றப்படுவதாக அம்மாநில அரசுத் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த நீர் ஒகேனக்கல்லுக்கு வந்து சேரும்போது ஆறு மற்றும் அருவி உள்ளிட்ட பகுதிகளில் அதிக வெள்ளப்பெருக்கு ஏற்பட வாய்ப்புள்ளது. நீர்வரத்து விநா டிக்கு 22 ஆயிரம் கன அடி அளவை கடந்து விட்டாலே ஒகேனக்கல்லில் சுற்றுலாப் பயணிகள் ஆற்றில் இறங்கவும், அருவிகளில் குளிக்கவும் தடை விதிக்கப்படும். அதிகப்படியான நீர்வரத்தின் போது, அவசர சூழலை எதிர்கொள்ளத் தேவை யான அனைத்து ஏற்பாடுகளையும் அரசு அதிகாரிகள் தொடர்ந்து மேற்கொண்டு வருகின்றனர்.
நேற்று மாலை நிலவரப்படி மேட்டூர் அணைக்கு 18,058 கனஅடி நீர்வரத்து இருந்தது. கடந்த 26-ம் தேதி 74.55 அடியாக இருந்த நீர்மட்டம் தற்போது, 79.33 அடியாக உயர்ந்துள்ளது. கடந்த 5 நாட்களில் 5 அடி நீர்மட்டம் உயர்ந்துள்ளது. அணையில் இருந்து குடிநீர் தேவைக்காக 1,000 கனஅடி தண்ணீர் திறந்து விடப்பட்டுள்ளது.
காவிரியில் நீர்வரத்து அதிகரித்துள்ளதால், ஆற்று வெள்ளத்தில் ஏராளமான மீன்கள் அடித்து வரப்படுகிறது. மேட்டூர் நீர்த்தேக்க பகுதிகளில் அப்பகுதி மக்கள் தற்காலிக முகாம் அமைத்து மீன்பிடி தொழிலில் ஈடுபட்டு வருகின்றனர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT