Published : 17 Jun 2015 10:31 AM
Last Updated : 17 Jun 2015 10:31 AM

அடிப்படை தேவைகள் நிறைவேற்றப்படவில்லை: சுகாதார சீர்கேட்டில் செங்கல்பட்டு பஸ் நிலையம் - உங்கள் குரல் பகுதியில் பயணிகள் குமுறல்

சுகாதார சீர்கேடு காரணமாக செங்கல்பட்டு பேருந்து நிலையத்தில் கடும் அவதிக்கு ஆளாகி வருவதாக ‘தி இந்து’வின் உங்கள் குரலில் பயணிகள் புகார் தெரிவித்துள்ளனர்.

செங்கல்பட்டு நகரத்தின் மையப்பகுதியில் அமைந்துள்ள அண்ணா பேருந்து நிலையத்தின் பராமரிப்பு பணிகள், நகராட்சி நிர்வாகத்தின் கட்டுப்பாட்டில் உள்ளது. இங்கிருந்து தினந் தோறும் விழுப்புரம் அரசு போக்குவரத்து மண்டலம் சார்பில் 121 பேருந்துகளும், மாநகர போக்கு வரத்து பணிமனை சார்பில் 56 பேருந்துகளும், தனியார் பஸ்கள் 35-ம் இயக்கப்பட்டு வருகின்றன.

கல்பாக்கம், மதுராந்தகம், தாம்பரம், மாமல்லபுரம் மற்றும் காஞ்சிபுரம் ஆகிய பகுதிகளிலிருந்து 60-க்கும் மேற்பட்ட பஸ்கள் வந்து செல்கின்றன.

இதனால் நாள்தோறும் 50 ஆயிரம் பயணிகள் புழங்கும் இடமாக செங்கல்பட்டு பஸ் நிலையம் திகழ்கிறது. ஆனால் கழிப்பறை, குடிநீர், இருக்கைகள் உள்ளிட்ட அடிப்படை தேவைகள் ஏதும் ஏற்படுத்தப்படவில்லை. இதனால் பயணிகள் குறிப்பாக பெண்கள், குழந்தைகள் மற்றும் முதியவர்கள் பெரும் சிரமத்துக்கு ஆளாகின்றனர்.

அமர இருக்கைகள்தான் இல்லை என்றால் நிற்பதற்கும் நடைமேடைகளும் கூட இல்லாமல் போகும் நிலை ஏற்பட்டுள்ளது. பஸ் நிலையத்தின் உள்ளே அமைக்கப்பட்டுள்ள கடைகளின் உரிமையாளர்கள் தங்கள் வியாபாரத்தை நடைமேடை வரை இழுத்துள்ளனர். இதனால், மழை மற்றும் வெயிலில் பயணிகள் நிற்க வேண்டிய அவலம் உள்ளது.

இதுகுறித்து, பயணிகள் சிலர் உங்கள் ‘தி இந்து’வின் உங்கள் குரலில் அளித்து புகாரில் கூறியிருப்பதாவது:

நகராட்சி நிர்வாகம் பயணிகளுக்காக எந்தவிதமான அடிப்படை வசதிகளையும் இங்கு ஏற்படுத்தவில்லை.இரவு நேரங்களில் பேருந்து நிலையத்தில் மின்விளக்குகள் எரியாததால், இருள் சூழ்ந்து காணப்படுகிறது. இதை பயன்படுத்தி, சமூக விரோதிகள் இங்கு பல்வேறு தவறான காரியங்களில் ஈடுபட்டு வருகின்றனர்.

மேலும், கிராமப்புற பேருந்து நிற்குமிடத்தில் சிறுநீர் குளம்போல தேங்கி கடும் துர்நாற்றம் வீசுகிறது. இதனால், சுகாதார சீர்கேடு ஏற்பட்டுள்ளது. எனவே இங்கு இருக்கைகள், ‘நம்ம டாய்லெட்’ வசதி ஏற்படுத்த வேண்டும். இவ்வாறு அவர்கள் தெரிவித்தனர்.

இதுகுறித்து, செங்கல்பட்டு நகராட்சி ஆணையர் (பொறுப்பு) கணேசன் கூறியதாவது:

பேருந்து நிலையத்தின் உள்ளே ‘நம்ம டாய்லெட்’ அமைப்பதற்கு போதிய இடவசதி இல்லை. நகராட்சி சார்பில் பலமுறை இருக்கைகள் அமைக்கப்பட்டும் அவை அடிக்கடி உடைக்கப்படுகிறது. அவற்றை சீரமைக்க நிதியில்லை. எனினும், பயணிகளின் வசதிக்காக இருக்கைகள் அமைப்பது தொடர்பாக, நகராட்சியின் மன்ற கூட்டத்தில் தீர்மானம் கொண்டு வர நடவடிக்கை எடுக்கப்படும். மேலும், பேருந்து நிலையத்தில் கழிவுகள் உடனடியாக அகற்றப்படும் என்றார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x