Published : 01 Jun 2015 12:57 PM
Last Updated : 01 Jun 2015 12:57 PM

சாலையில் பழுதடைந்து நின்ற அரசுப் பேருந்து: தள்ளி உதவிய தருமபுரி எம்.பி. அன்புமணி

தருமபுரியில் சாலையில் நடுவழியில் பழுதடைந்து நின்ற அரசுப் பேருந்தை இயக்க தனது தொண்டர்களுடன் இணைந்து பேருந்தை தள்ளி உதவி செய்தார் அத்தொகுதி எம்.பி. அன்புமணி ராமதாஸ்.

அன்புமணி ராமதாஸ் வேண்டுகோளுக்கு இணங்க அரசு அதிகாரிகளால் ஏற்பாடு செய்யப்பட்ட மாணவர்கள் கல்விக் கடன் பெறுவது தொடர்பான வழிகாட்டி நிகழ்ச்சி தருமபுரி - திருப்பத்தூர் சாலியில் உள்ள ஒரு தனியார் மண்டபத்தில் நடைபெறுகிறது.

இந்த நிகழ்ச்சியில் பங்கேற்க அன்புமணி ராமதாஸ் தனது தொண்டர்களுடன் காரில் சென்று கொண்டிருந்தார்.

அப்போது, முகமது அலி கிளப் ரோடு பகுதியில் குறுகலான சாலையில் அரசுப் பேருந்து ஒன்று பழுதடைந்து நடுவழியில் நின்று கொண்டிருந்தது.

அந்தப் பேருந்தில் மிகக் குறைந்த அளவிலேயே பயணிகள் இருந்தனர். இதனால் பேருந்தை தள்ளி ஸ்டார்ட் செய்ய போதிய ஆள் இல்லாமல் இருந்தது.

இதனைக் கண்ட தருமபுரி எம்.பி. அன்புமணி தனது தொண்டர்களுடன் சென்று பேருந்தை தள்ளி மீண்டும் அதை ஸ்டார்ட் செய்ய உதவினார்.

அன்புமணிக்கு பேருந்து பயணிகளும் ஓட்டுனர் மற்றும் நடத்துனரும் நன்றி தெரிவித்தனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x