Published : 03 Jun 2015 08:55 PM
Last Updated : 03 Jun 2015 08:55 PM
ஆர்.கே. நகர் சட்டப்பேரவை தொகுதி இடைத்தேர்தலுக்கான வேட்புமனு தாக்கல் இன்று தொடங்கியது. முதல் நாளில் ‘டிராபிக்’ ராமசாமி, ‘தேர்தல் மன்னன்’ பத்மராஜன் உட்பட 5 பேர் மனு தாக்கல் செய்தனர்.
சென்னை ஆர்.கே. நகர் தொகுதி சட்டப்பேரவை உறுப்பினரான வெற்றிவேல் தனது பதவியை கடந்த மாதம் 17-ம் தேதி ராஜினாமா செய்தார். இதையடுத்து அத்தொகுதிக்கு வரும் 27-ம் தேதி இடைத்தேர்தல் நடக்கிறது. இந்த இடைத் தேர்தலுக்கான வேட்பு மனு தாக்கல் இன்று தொடங்கியது
தண்டையார்ப்பேட்டை நெடுஞ்சாலையில் உள்ள மாநகராட்சி 4 வது மண்டல அலுவலகத்தில், மண்டல அதிகாரியான கே.சவுரிராஜனிடம் வேட்பு மனுக்களை தாக்கல் செய்யலாம் என்று அறிவிக்கப்பட்டிருந்தது.
வேட்புமனு தாக்கல் தொடங்கியதும் ‘தேர்தல் மன்னன்’ என்று அழைக்கப்படும் கே. பத்மராஜன் சுயேட்சையாக வேட்பு மனுவை தாக்கல் செய்தார். அவரை தொடர்ந்து சுயேட்சை வேட்பாளர் எம். அகமது ஷாஜகான், இந்திய குடியரசு கட்சி( அம்பேத்கர்) சார்பில் டி. ரவி பறையனார் ஆகியோர் மனு தாக்கல் செய்தனர்.
பிற்பகல் 2 மணியளவில் ‘டிராபிக்’ கே.ஆர். ராமசாமி, ஆம் ஆத்மி தொண்டர்களுடன் வந்து மனு தாக்கல் செய்தார். இந்திய மக்கள் கட்சியை (மதச்சார்பற்றது) சார்ந்த ஆர். ஆபிரகாம் ராஜாமோகன் என்பவரும் இன்று தனது மனுவை தாக்கல் செய்தார். இன்று காலை 11 மணிக்கு தொடங்கிய மனு தாக்கல் மாலை 3 மணிக்கு முடிந்தது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT