Published : 10 Jun 2015 07:40 AM
Last Updated : 10 Jun 2015 07:40 AM

மெட்ரோ ரயில் நிலையங்களில் 200 எஸ்கலேட்டர்கள் அமைக்க திட்டம்: மக்கள் சிரமமின்றி வந்து செல்ல வசதி

மெட்ரோ ரயில் நிலையங்களில் மக்களின் சிரமத்தை போக்குவதற்காக 200 எஸ்கலேட்டர்களை (நகரும் படிக்கட்டு) அமைக்க மெட்ரோ ரயில்வே முடிவு செய்துள்ளது.

சென்னையில் போக்குவரத்து நெரிசலைக் குறைப்பதற்காக ரூ.20 ஆயிரம் கோடி செலவில் இருவழித் தடங்களில் 45 கி.மீ. தூரத்துக்கு மெட்ரோ ரயில் பணிகளில் 80 சதவீதம் நிறைவு பெற்றுள்ளன. இதில், வண்ணாரப்பேட்டையில் தொடங்கி உயர்நீதிமன்றம், அண்ணாசாலை, சைதாப்பேட்டை வழியாக விமான நிலையம் வரை 24 கி.மீ. தூரத்துக்கு (19 ரயில் நிலையங்கள்) சுரங்க வழிப்பாதையாக மெட்ரோ ரயில்கள் இயக்கப்படவுள்ளது. சென்ட்ரல் ரயில் நிலையத்தில் இருந்து அண்ணாநகர், திருமங்கலம், கோயம்பேடு, வடபழனி, ஆலந்தூர் வழியாக பரங்கிமலை வரை 22 கி.மீ தூரத்துக்கு உயர்த்தப்பட்ட வழித்தடமாக (13 ரயில் நிலையங்கள்) இரண்டாவது பாதையும் அமைக்க திட்டமிட்டு பணிகள் நடைபெற்று வருகின்றன.

ரயில் நிலையங்களில் போதிய அளவில் வசதிகளை கொண்டுவர மெட்ரோ ரயில் நிறுவனம் திட்டமிட்டுள்ளது. மக்கள் ரயில் நிலையங்களுக்கு வந்து செல்ல அடிப்படை வசதியாக எஸ்கலேட்டர் (நகரும் படிக்கட்டு) தேவையாகவுள்ளது. தொடக்க விழாவுக்கு தயாராகவுள்ள கோயம்பேடு ஆலந்தூர் வரையிலான ரயில் நிலையங்களில் தலா 5 எஸ்கலேட்டர்கள் அமைக்கப்பட்டுள்ளன.

இது தொடர்பாக மெட்ரோ ரயில்வே அதிகாரிகளிடம் கேட்டபோது, “சென்னையில் நடந்து வரும் ஒட்டுமொத்த மெட்ரோ ரயில் பணிகளை அடுத்த ஆண்டு இறுதிக்குள் முடிக்க திட்டமிட்டுள்ளோம். மெட்ரோ ரயில் நிலையங்களுக்கு மக்கள் வந்து செல்வதற்கு எஸ்கலேட்டர் வசதி முக்கியமானதாக இருக்கிறது. எனவே, ரயில் நிலையங்களுக்கு தேவைக்கு ஏற்றவாறு எஸ்கலேட்டர்களை அமைக்கவுள்ளோம்.

ஒவ்வொரு ரயில் நிலையங்களிலும் 5 முதல் 6 எஸ்கலேட்டர்கள் அமைக்கப்படும். மொத்தமுள்ள 32 ரயில் நிலையங்களிலும் தற்போது 150 எஸ்கலேட்டர்கள் அமைக்கும் பணிகள் நடைபெற்று வருகின்றன. மேலும், அடுத்த சில ஆண்டுகளில் தேவைப்பட்டால், கூடுதலாக 50 எஸ்கலேட்டர்களை அமைக்கவுள்ளோம். அதற்காக சென்ட்ரல், கோயம்பேடு, மீனம்பாக்கம் உள்ளிட்ட ரயில் நிலையங்களில் தற்போதே போதிய அளவுக்கு இடங்களை ஒதுக்கியுள்ளோம்’’ என்றனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x