Published : 28 Jun 2015 09:14 AM
Last Updated : 28 Jun 2015 09:14 AM

தேவையற்ற வழக்குகளால் நேரம் விரயம் ஆகிறது: உயர் நீதிமன்ற நீதிபதி பேச்சு

தேவையற்ற வழக்குகளுக்கு நேரம் செலவிட வேண்டியது உள்ளது என சென்னை உயர் நீதிமன்ற நீதிபதி எஸ்.நாகமுத்து தெரிவித்தார். ஈரோடு, திருப்பூர், கரூர் மாவட்ட மாற்றுமுறை தீர்வு மைய உறுப்பினர்களுக்கான பயிற்சி வழங்கும் நிகழ்ச்சி ஈரோட்டில் நேற்று நடந்தது. விழாவில் சென்னை உயர்நீதிமன்ற நீதி பதி எஸ்.நாகமுத்து பேசியதாவது:

சிறு, சிறு பிரச்சினைக்குகூட நீதிமன்றத்தை நாடுவது அதிகரித்து விட்டதால், அவற்றை தீர்க்க போதுமான நேரம் கிடைப்பதில்லை. தேவையற்ற வழக்குகளுக்கு நேரம் செலவிட வேண்டியது உள்ளது. எனவே, பிரச்சினைகளை தீர்க்க சமரச மையத்தை அணுகி, அங்கு தீர்வு வரவில்லையெனில் நீதிமன்றத்தை நாடலாம் என்றார்.

நீதிபதி கே.பி.கே.வாசுகி பேசும்போது, “நீதிமன்றங்களின் பணிச்சுமையை குறைக்கக்கூடிய வகையில் மக்கள் நீதிமன்றம், சமரச மையம் போன்றவை செயல்படுவதுபோல இந்த மையத்தின் மூலம் செலவு, காலதாமதமின்றி வழக்குகளை தீர்க்க முடியும்’’ என்றார்.

சென்னை உயர் நீதிமன்ற நீதிபதி எம்.எம்.சுந்தரேஷ் பேசும்போது, “சமரச தீர்வு என்பது இருவருக்கும் திருப்தியை தரும். ஒரு பிரச்சினையை சமரசமாக தீர்ப்பது என்பது உலகில் உயர்ந்த விஷயமாகும்” என்றார். தீர்வு மையத்தின் செயல்பாடுகள் குறித்த நிகழ்ச்சியில் சென்னை உயர் நீதிமன்ற நீதிபதி சதீஷ் கே அக்னிஹோத்ரி பேசினார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x