Published : 08 Jun 2015 07:56 AM
Last Updated : 08 Jun 2015 07:56 AM

அம்பேத்கர் - பெரியார் வாசகர் வட்ட தடை நீக்கம்: சென்னை ஐஐடி நிர்வாகம் நடவடிக்கை

சென்னை ஐஐடியில் இயங்கி வந்த அம்பேத்கர் - பெரியார் வாசகர் வட்டம் மீதான தடை நேற்று நீக்கப்பட்டது.

அம்பேத்கர் - பெரியார் வாசகர் வட்டம் என்ற பெயரில் சென்னை ஐஐடியில் ஒரு மாணவர் அமைப்பு இயங்கி வந்தது. இந்த அமைப்பு மத்திய அரசின் கொள்கைகளை யும் பிரதமர் மோடியையும் விமர்சித்து பிரச்சாரம் செய்வதாக கூறி கடந்த மே 15-ம் தேதி அதன் அங்கீகாரத்தை ஐஐடி நிர்வாகம் ரத்து செய்தது.

இதற்கு தமிழக அரசியல் கட்சித் தலைவர்கள் கடும் கண்டனம் தெரிவித்தனர். மாணவர் மற்றும் இளைஞர் அமைப்புகளும், அரசியல் கட்சிகளும் தடையை வாபஸ் பெறக்கோரி கடந்த வாரம் தொடர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

இந்நிலையில் ஐஐடி இயக்குநர் பேராசிரியர் பாஸ்கர் ராமமூர்த்தி, டீன் (கல்வி) கே.ராமமூர்த்தி ஆகியோரை மாணவர் அமைப்பின் நிர்வாகிகள் நேற்று காலையில் சந்தித்துப் பேச்சுவார்த்தை நடத்தினர். தடையை நீக்கிவிட்டு மீண்டும் அங்கீகாரம் வழங்க வேண்டும் என்று அப்போது அவர்கள் வலியு றுத்தினர். இதைத் தொடர்ந்து ஐஐடி நிர்வாகம் மற்றும் மாணவர் அமைப்பு சார்பில் நேற்று இரவு ஒரு கூட்டு அறிக்கை வெளியிடப் பட்டது.

அந்த அறிக்கையில் கூறியிருப் பதாவது:

அம்பேத்கர் - பெரியார் வாசகர் வட்டம் அமைப்பானது ஒரு சுதந்திரமான மாணவர் அமைப்பு என்று ஐஐடி மாணவர் பிரிவு டீன் மீண்டும் அங்கீகாரம் அளித்துள்ளார். ஆலோசகராக நியமிக்கப்பட்டுள்ள பேராசிரியர் மிலின்ட் பிரமி சுதந்திரமான மாணவர் அமைப்புகளுக்கான வழிகாட்டு நெறிமுறைகள் தொடர்பாக அம்பேத்கர்-பெரியார் வாசகர் வட்டத்துக்கு தேவையான ஆலோசனைகளை வழங்குவார்.

மாணவர் அமைப்பின் நிர்வாகிகள் முன்வைத்த கோரிக்கைகள், சில மாற்றங்கள் தொடர்பாக மாணவர்கள் வாரியம் ஆலோசனை செய்தது. அவற்றில் ஒருசில விஷயங்கள் நடைமுறைப்படுத்தப்படும். இதர மாற்றங்கள் குறித்து மாணவர் விவகார குழுவும், மாணவர்கள் வாரியமும் ஆய்வு செய்யும்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x