Last Updated : 11 Jun, 2015 08:42 AM

 

Published : 11 Jun 2015 08:42 AM
Last Updated : 11 Jun 2015 08:42 AM

சூடு பிடித்தது ஹெல்மெட் விற்பனை: ரூ.295 முதல் ரூ.15 ஆயிரம் வரை கிடைக்கிறது

தமிழகத்தில் ஜூலை 1-ம் தேதி முதல் இரு சக்கர வாகனத்தில் செல்பவர்கள் கட்டாயம் ஹெல்மெட் அணிய வேண்டும் என்று நீதிமன்றம் உத்தரவிட்டதைத் தொடர்ந்து ஹெல்மெட் விற்பனை சூடு பிடித்துள்ளது. ஹெல்மெட் கடை களில் கூட்டம் அலைமோதுகிறது.

தமிழகத்தில் இரு சக்கர வாகனங்களில் செல்பவர்கள் ஜூலை 1-ம் தேதி முதல் கண்டிப்பாக ஹெல்மெட் அணிய வேண்டும் என்று சென்னை உயர் நீதிமன்றம் கடந்த 8-ம் தேதி உத்தரவிட்டது. இதையடுத்து தமிழகம் முழுவதும் உள்ள ஹெல்மெட் கடைகளில் விற்பனை சூடு பிடித்துள்ளது.

இதுகுறித்து சென்னை அண்ணா சாலையில் உள்ள ஹெல்மெட் கடை களில் பணியாற்றும் செந்தில் குமார், ஜுபைர் ஆகியோர் கூறியதாவது:

உயர் நீதிமன்ற உத்தரவுக்கு அடுத்த நாளே ஹெல்மெட்களை வாங்க மக்கள் அதிக அளவில் கடைக்கு வரத்தொடங்கிவிட்டனர். இதன் மூலம் ஹெல்மெட் விற்பனை அதிகரித்துள்ளது. ஜூலை 1-ம் தேதி நெருங்கும் நேரத்தில் ஹெல்மெட் விற்பனை இன்னும் அதிகரிக்க வாய்ப்புள்ளது. ஐஎஸ்ஐ தரம் கொண்ட ஹெல்மெட்களைத்தான் அணிய வேண்டும் என்று நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. பெரும்பாலான இரு சக்கர வாகன ஓட்டிகள் சாலை ஓரங்களில் விற்பனை செய்யப்படும் தரமில்லாத ஹெல்மெட்களை வாங்கிச் செல்கின்றனர். ஐஎஸ்ஐ தரம் கொண்ட ஹெல்மெட்கள்தான் பாதுகாப்பானது.

தமிழகத்தில் ஹெல்மெட்கள் தயாரிக்கும் நிறுவனங்கள் இல்லை. பெல்காம், டெல்லி, உத்தரகாண்ட் போன்ற பல்வேறு இடங்களில் இருந்து ஹெல்மெட் விற்பனைக்கு கொண்டு வரப்படுகிறது. வெளிநாடு களில் இருந்தும் ஹெல்மெட்கள் இறக்குமதியாகிறது. 26-க்கும் மேற்பட்ட நிறுவனங்கள் 300-க்கும் மேற்பட்ட மாடல்களில் ஹெல்மெட் களை தயாரிக்கின்றன. ரூ.295-ல் இருந்து ரூ.15 ஆயிரம் வரை ஐஎஸ்ஐ தரம் கொண்ட ஹெல்மெட்கள் விற்பனைக்கு உள்ளன. ரூ.15 ஆயிரம் மதிப்புள்ள ஹெல்மெட்கள் தாய்லாந்தில் இருந்து இறக்குமதி செய்யப்படுகிறது. வெளிநாடுகளில் ரூ.1.50 லட்சம் மதிப்புகொண்ட ஹெல்மெட்களும் உள்ளன. இவற்றை ரேஸ்களில் கலந்து கொள்பவர்கள் பயன்படுத்து கின்றனர். இவற்றை யாராவது கேட்டால் நாங்கள் இறக்குமதி செய்து கொடுக்கிறோம்.

இவ்வாறு அவர்கள் கூறினர்.

ஹெல்மெட் அணிவதால் முடி கொட்டுவதாக இரு சக்கர வாகன ஓட்டிகள் பலர் கூறுகின்றனர். இதுபற்றி சென்னை ராஜீவ்காந்தி அரசு பொது மருத்துவமனை சரும நோய் துறை தலைமை டாக்டர் கே.மனோகரன் கூறும்போது, “ஹெல்மெட் அணிந்தால் 100 சதவீதம் முடி கொட்டாது. முடி கொட்டுவதற்கு மன அழுத்தம்தான் 70 சதவீதம் காரணமாக உள்ளது. முடிகளின் வேர்களுக்கு ரத்தம் சரியாக செல்லாதது, இரும்பு சத்து உள்ளிட்ட பல்வேறு சத்துக்கள் குறைபாடு காரணமாகவும் முடி கொட்டும்” என்றார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x