Published : 30 Jun 2015 10:22 AM
Last Updated : 30 Jun 2015 10:22 AM

ஊர்க்காவல் படையினருக்கு 10 மாதமாக சம்பளம் இல்லை - உங்கள் குரல்: வாசகர்களின் புகார்கள்

‘தி இந்து’ வின் ‘உங்கள் குரல்’ சேவையைப் பயன்படுத்தி ஏராளமான வாசகர்கள் தினந்தோறும் தங்களது புகார்கள், குறைகளை பதிவு செய்துவருகின்றனர். அதில் வாசகர்கள் பகிர்ந்துகொண்ட புகார்கள்:

ஊர்க்காவல் படையினருக்கு 10 மாதமாக சம்பளம் இல்லை

தமிழகம் முழுவதும் 16 ஆயிரம் ஊர்க்காவல் படையினர் உள்ளனர். போலீஸாருக்கு உறுதுணையாக இவர்கள் பணியில் ஈடுபடுத்தப்படுகின்றனர். ஊர்க்காவல் படையில் உள்ள வீரர்களுக்கு முறையாக சம்பளம் வழங்கப்படுவதில்லை என்ற குற்றச்சாட்டு சில ஆண்டுகளாக தொடர்ந்து எழுகிறது. இதுகுறித்து 'தி இந்து' உங்கள் குரலில் ஏராளமான ஊர்க்காவல் படையினர் புகார் தெரிவித்துள்ளனர். அவர்கள் கூறியதாவது:

‘‘ஊர்க்காவல் படையினர் பகலில் வேலை செய்தால் நாள் ஒன்றுக்கு ரூ.150-ம், இரவில் வேலை செய்தால் ரூ.200-ம் ஊதியமாக வழங்கப்படுகிறது. எங்களுக்கு மாத சம்பளம் கிடையாது. வேலை செய்யும் நாட்களுக்கு ஏற்ப சம்பளம் வழங்கப்படும். ஆனால் இதைக்கூட ஒவ்வொரு மாதமும் கொடுப்பதில்லை. 6 மாதம் பாக்கி வைத்து பின்னர் 2 மாத சம்பளத்தை மட்டும் மொத்தமாக கொடுப்பார்கள். 2014-ம் ஆண்டு செப்டம்பர் மாதம் முதல் கடந்த 10 மாதங்களாக எங்களுக்கு சம்பளம் கொடுக்கப்படவில்லை.

கடந்த இரு ஆண்டுகளில் சுமார் 2 ஆயிரம் பேர் வேலையை விட்டு சென்றுவிட்டனர். அவர்களுக்கெல்லாம் கடிதம் போட்டு மீண்டும் அழைக்கின்றனர்.

காவல் நிலையங்களிலும் எங்களுக்கு பணி ஒதுக்கப்படுகிறது. அங்கே எங்களுக்கு எந்த மரியாதையும் கிடைப்பதில்லை. அதிகாரிகளிடம் சென்று கேட்டால், ‘இது பொது சேவை மாதிரி; எதையும் எதிர்பார்க்காதீர்கள்' என்கின்றனர். இப்படி ஒரு படையை வைத்திருப்பதற்கு பதிலாக, அதை கலைத்து விடலாம்.’’

இவ்வாறு அவர்கள் கூறினர்.

ஊர்க்காவல் படை அதிகாரிகளிடம் கேட்டபோது, "போலீஸ் துறையில் இருந்துதான் எங்களுக்கு சம்பளம் வர வேண்டும். ஆனால் அவர்கள் எங்களுக்கு சரியாக கொடுப்பதில்லை. வீரர்கள் எப்படி மன உளைச்சலில் இருக்கிறார்களோ, அதுபோலத்தான் ஊர்க்காவல் படை அதிகாரிகளும் கடுமை யான மன உளைச்சலுக்கு ஆளாக்கப்படுகிறார்கள்" என்றனர்.

***

மின் விளக்குகள் எரிவதில்லை

மாதவரம் மூர்த்தி நகர் பிரதான சாலையில் மின் விளக்குகள் கடந்த 3 மாதங்களாக எரியவில்லை. இதுகுறித்து ‘தி இந்து’ உங்கள் குரலில் மாதவரத்தை சேர்ந்த எஸ்.கிருஷ்ணமூர்த்தி கூறியதாவது:

‘‘சென்னை மாநகராட்சி, 25-வது வார்டு, மாதவரம் மூர்த்தி நகர் பிரதான சாலை யில் 20-க்கும் மேற்பட்ட மின் விளக்குகள் கடந்த 3 மாதங்களாக எரிவதில்லை. இதனால் செயின் பறிப்பு, வழிப்பறிகள் நடை பெறுகின்றன. மாநகராட்சியிடம் புகார் தெரி வித்தும் எந்த நடவடிக்கையும் எடுக்கப் படவில்லை.’’ இவ்வாறு அவர் கூறினார்.

இது தொடர்பாக மாநகராட்சி மின்துறை அதிகாரி ஒருவரிடம் கேட்டபோது, “அச் சாலையில் உள்ள அனைத்து மின் விளக்கு களும் பழைய மின் கம்பத்தில், பழைய உபகரணத்தில் பொருத்தப்பட்டவையா கும். அதனால் அடிக்கடி பழுது ஏற்படுகிறது. இப்பகுதியில் புதிய மின் கம்பங்கள், புதிய மின் விளக்குகள் பொருத்துவது தொடர்பான கருத்துரு மாநகராட்சி நிர்வாகத்துக்கு அனுப்பப்பட்டுள்ளது. இப்பிரச்சினை விரைவில் முடிவுக்கு வரும்” என்றார்.

***

குரூப்-2 ஏ, விஏஓ பணிகளுக்கு 2-வது கட்ட கலந்தாய்வு எப்போது?

தமிழக அரசின் பல்வேறு துறைகளில் காலியாகவுள்ள உதவியாளர், கருவூல கணக்காளர் உள்ளிட்ட பணிகளில் 2,846 காலியிடங்களை (நேர்காணல் அல்லாத பணிகள்) நிரப்புவதற்காக கடந்த 2014-ம் ஆண்டு ஜூன் மாதம் குரூப்-2-ஏ தேர்வு நடத்தப்பட்டது. தேர்வு முடிவு டிசம்பர் மாதம் வெளியிடப்பட்டு முதல்கட்ட கலந்தாய்வு உடனடியாக தொடங்கி ஜனவரி வரை நடந்தது.

இதேபோல், கிராம நிர்வாக அதிகாரி (விஏஓ) பணியில் 2,342 காலியிடங்களை நிரப்பும் பொருட்டு கடந்த ஆண்டு ஜூன் மாதம் விஏஓ தேர்வு நடத்தப்பட்டு டிசம்பரில் தேர்வு முடிவு வெளியிடப்பட்டது. இதற்கான முதல்கட்ட கலந்தாய்வு கடந்த ஜனவரி, பிப்ரவரியில் நடத்தப்பட்டது.

இந்த நிலையில், 4 மாதங்களுக்கு மேல் ஆகியும் இன்னும் 2-வது கட்ட கலந்தாய்வு நடத்தப்படவில்லை என்றும் உடனடி யாக கலந்தாய்வை நடத்த வேண்டும் என்றும் தேர்வர்கள் ‘தி இந்து’ உங்கள் குரல் சேவையில் கோரிக்கை விடுத்தனர். அவர்கள் மேலும் கூறியதாவது:

‘‘பொதுவாக ஒரு தேர்வுக்கான கலந்தாய்வு நடத்தும்போது, அதில் கலந்துகொள்ளாதவர்கள் மற்றும் பணியில் சேராதவர் களால் காலியிடங்கள் ஏற்படும். அவை 2-வது கட்டம், 3-வது கட்டம் என அடுத்தடுத்த கலந்தாய்வுகள் மூலமாக நிரப்பப் படும். இதனால், காத்திருக்கும் மாணவர்களுக்கு வாய்ப்பு கிடைக்கும். அந்த வகையில், குரூப்-2ஏ பணிகளில் சுமார் 700 இடங்களும் அதேபோல், விஏஓ பணியில் ஏறத்தாழ 1,100 இடங்களும் இருப்பதாக தெரிகிறது. முதல்கட்ட கலந்தாய்வின் முடிவில் உள்ள காலியிடங்களை நிரப்ப உடனடியாக 2-வது கட்ட கலந்தாய்வு நடத்தப்படும் என்று டிஎன்பிஎஸ்சி அறிவித்திருந்தது. ஆனால், 4 மாதங்கள் ஆகியும் இன்னும் அது குறித்த அறிவிப்பு ஏதும் வரவில்லை. எனவே, காத்திருக்கும் தேர்வர்கள் பயன்பெறும் வகையில் உடனடியாக 2-வது கட்ட கலந்தாய்வை நடத்த டிஎன்பிஎஸ்சி முன்வர வேண்டும்.’’ இவ்வாறு அவர்கள் கூறினர்.

அன்புள்ள வாசகர்களே..

‘தி இந்து’ செய்திகளை வாசிக்கும்பொழுதில் உங்களுக்குத் தோன்றும் எண்ணங்கள் / திருத்தங்கள் / சந்தேகங்கள் / நீங்கள் எதிர்கொள்ளும் நேரடி பிரச்சினைகள், பார்க்கும் நிகழ்வுகள் - கேட்டறியும் சமூகப் பிரச்சினைகள் என எதுவானாலும் சரி... அலைபேசி மூலம் உடனுக்குடன் தொடர்புகொண்டு உங்கள் குரலில் பதிவு செய்யலாம். நீங்கள் தரும் உபயோகமான தகவல்களை எங்கள் செய்தியாளர்கள் மூலம் சரிபார்த்து செய்தியாக்கக் காத்திருக்கிறோம்.

நீங்கள் செய்யவேண்டியதெல்லாம் இதுதான்...

044-42890002 என்ற எண்ணை உங்கள் அலைபேசி வழியாக அழையுங்கள். உடனடியாகத் தொடர்பு துண்டிக்கப்படும். அடுத்த சில நொடிகளில், உங்கள் அலைபேசிக்கு அழைப்பு வரும் (அழைப்புக் கட்டணத்துக்கான செலவை நீங்கள் ஏற்கும்படி ஆகக் கூடாது என்பதற்காகவே இந்த ஏற்பாடு). மறு முனையில் ஒலிக்கும் குரலின் வழிகாட்டுதல்படி, 1 அல்லது 2-ஐ அழுத்திவிட்டு உங்கள் கருத்தை பதிவு செய்யுங்கள். நினைத்ததை நினைத்தமாத்திரத்தில் எந்த நேரத்திலும் எங்களோடு இனி பகிர்ந்துகொள்ள உங்களை அன்போடு அழைக்கிறோம்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x