Published : 08 Jun 2015 10:50 AM
Last Updated : 08 Jun 2015 10:50 AM

சென்னையில் சிறுவன் அடித்துக் கொலை: மாணவர்கள் உட்பட 3 பேர் கைது

பெரம்பூர் பேரக்ஸ் சாலையை சேர்ந்தவர் பாத்திமா. இவரது மகன் அப்துல் கபூர் (17). 8-ம் வகுப்பு படித்துவிட்டு குடும்ப வறுமை காரணமாக, புரசைவாக்கம் கங்காதீஸ்வரர் கோயில் அருகே உள்ள தனியார் கடையில் வேலை செய்து வந்தார். நேற்று மதியம் கடைக்கு 3 பேர் வந்தனர். பெல்டை விலை பேசுவதுபோல் பேசியவர்கள், திடீரென அதை திருடிக் கொண்டு வெளியே ஓடினர்.

இதனைப் பார்த்த அப்துல் கபூர், அவர்களை விரட்டிச் சென்று பிடித்தார். ஆத்திரமடைந்த 3 பேரும், அப்துல் கபூரை சரமாரியாக அடித்து உதைத்து கீழே தள்ளினர். இதனைப் பார்த்த அப்பகுதி மக்கள் ஓடி வந்து 3 பேரையும் பிடித்தனர். தலையில் பலத்த காயமடைந்து மயங்கிய நிலையில் இருந்த அப்துல் கபூரை மீட்டு சிகிச்சைக்காக கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். டாக்டர்கள் பரிசோதனை செய்து பார்த்ததில், சிறுவன் அப்துல் கபூர் உயிரிழந்து இருப்பது தெரியவந்தது.

பொதுமக்களால் பிடிக்கப்பட்ட 3 பேரும் கீழ்ப்பாக்கம் போலீஸில் ஒப்படைக்கப்பட்டனர். அவர்களிடம் நடத்தப்பட்ட விசாரணையில் 2 பேர் பாலிடெக்னிக் மாணவர்கள் என்பதும் மற்றொருவர் கொளத்தூரை சேர்ந்த சாரீஷ் (19) என்பதும் தெரியவந்தது. அவர்களை போலீஸார் கைது செய்தனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x