Published : 14 Jun 2015 10:13 AM
Last Updated : 14 Jun 2015 10:13 AM

டெல்லியைப் போல தமிழகத்திலும் மாற்றம் ஏற்படுத்த வேண்டும்: ஆம் ஆத்மி பொறுப்பாளர் சோம்நாத் பாரதி வேண்டுகோள்

டெல்லியைப் போல தமிழகத்திலும் ஆட்சி மாற்றத்தை ஏற்படுத்த ஆம் ஆத்மி கட்சியினர் உழைக்க வேண்டும் என்று அக்கட்சியின் தென்னிந்திய பொறுப்பாளரும், டெல்லி முன்னாள் அமைச்சருமான சோம்நாத் பாரதி வேண்டுகோள் விடுத்துள்ளார்.

சென்னை தியாகராய நகரில் நேற்று நடைபெற்ற ஆம் ஆத்மி கட்சியின் செயல் வீரர்கள் கூட்டத்தில் சோம்நாத் பாரதி பேசியதாவது:

ஆம் ஆத்மி கட்சி மற்ற கட்சிகளில் இருந்து வேறுபட்டது. மற்ற கட்சிகளில் இருப்பவர்களுக்கு அரசியல் ஒரு தொழில் மட்டுமே. ஆனால், நமக்கு அரசியல் என்பது மாற்றத்தை ஏற்படுத்துவதற்கான வழி. அந்த வழியில் பயணித்துதான் டெல்லியில் வரலாற்று வெற்றியுடன் ஆட்சி மாற்றத்தை ஏற்படுத்தியுள்ளோம். இதுபோன்ற மாற்றத்தை தமிழகத்திலும் ஏற்படுத்த வேண்டும்.

தமிழகத்தில் உள்ள ஒவ்வொரு வாக்குச் சாவடியிலும் 10 தன்னார் வலர்களை கண்டறிய வேண்டும். டெல்லியில் இதுபோன்ற தன்னார் வலர்கள் மூலமே மாற்றம் ஏற்பட்டது. வாக்குச் சாவடிக்கு 10 பேர் கூட இல்லாமல் தேர்தலில் போட்டியிட்டு எந்தப் பலனும் இல்லை. தமிழகத்தில் ஆம் ஆத்மி கட்சியை விரும்புபவர்கள் லட்சக்கணக்கில் இருக்கிறார்கள். அவர்களைக் கண்டறிந்து செயல் வீரர்களாக மாற்ற வேண்டும்.

இவ்வாறு சோம்நாத் பாரதி பேசினார்.

பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், ‘‘நான் கொடுமைப் படுத்தியதாக எனது மனைவி கொடுத்த புகாரில் துளியும் உண்மை இல்லை. இதன் பின்னணியில் மிகப்பெரிய சதி உள்ளது. உண்மையில் இந்தப் புகாரை கேட்டு நான் மிகவும் அதிர்ச்சி அடைந்தேன்’’ என்றார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x