Last Updated : 27 Jun, 2015 04:41 PM

 

Published : 27 Jun 2015 04:41 PM
Last Updated : 27 Jun 2015 04:41 PM

பெயரளவுக்குத்தான் சுகாதாரமான சுற்றுலா தலம்: குப்பையை கடலில் கொட்டுவது அதிகரிப்பு

கன்னியாகுமரியில் பிளாஸ்டிக், குப்பைகள் கொட்ட தடை அமலில் உள்ள நிலையில் இவற்றை கடலில் கொட்டி மாசடையச் செய்யும் போக்கு அதிகரித்து வருகிறது. இதனை தடுக்கும் நடவடிக்கையில் அலட்சியம் தொடர்வதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.

கன்னியாகுமரிக்கு தினமும் இந்தியாவின் அனைத்து மாநிலங்களிலிருந்தும், வெளிநாடு களில் இருந்தும் ஏராளமான சுற்றுலா பயணிகள் வருகின்றனர். ஏப்ரல், மே மாதமான கோடைகாலம், நவம்பர் முதல் ஜனவரி இறுதி வரையிலான காலங்கள் இங்கு முக்கிய சீஸனாக உள்ளது. விடுமுறை நாட்களிலும் அதிகமான சுற்றுலா பயணிகள் வந்து செல்வர். இயற்கை எழில் சூழ்ந்த கன்னியாகுமரியில் கடந்த 2010-ம் ஆண்டிலிருந்து பிளாஸ்டிக் பயன்படுத்த தடை விதிக்கப் பட்டது. பொதுஇடங்கள், சுற்றுலா மையங்களில் குப்பை கொட்டுவதற்கு கட்டுப்பாடு கடைபிடிக்கப்படுகிறது.

ஆனால் இவையெல்லாம் பெயரளவுக்கு மட்டும் தான் உள்ளது. முக்கடலும் சங்கமிக்கும் திரிவேணி சங்கமம், படகு இல்லம் அருகே, சூரிய அஸ்தமன மையம், காந்தி மண்டபத்திற்கு பின்புறம், கோவளம் கடற்கரை செல்லும் வழி எங்கும் குப்பை குவியல்களும், பிளாஸ்டிக் கழிவுகளும் நிறைந்து வருகின்றன.

இதுதொடர்பாக `தி இந்து’ நாளிதழில் வந்த செய்தியின் எதிரொலியாக கன்னியாகுமரி பேரூராட்சியில் அவசர கூட்டம் கூட்டி தீர்மானம் போடப்பட்டது. கன்னி யாகுமரி கடைகளில் பிளாஸ்டிக் கவர்களை விற்பவர்களுக்கு ரூ. 1 லட்சம் அபராதம் விதிப்பதை நடைமுறையில் கொண்டு வந்தனர். ஆனால் அதையும் மீறி தாராளமாக பயன்படுத்தப்படும் பிளாஸ்டிக் கழிவுகள் கடலோரங்களில் குவிந்து கிடக்கின்றன.

மாசடையும் கடல்

கன்னியாகுமரியை சேர்ந்த பஸ் ஓட்டுநர் ராஜேந்திரன் கூறும்போது, `கன்னியாகுமரியின் பெருமையை உணர்ந்து உலகம் முழுவதும் இருந்து சுற்றுலா பயணிகள் வருகின்றனர். ஆனால் இதை கண்டுகொள்ளாமல் கடலை மாசுபடுத்தி வருகின்றனர். பயன்படுத்தப்பட்ட பிளாஸ்டிக் கப், கவர்கள், மற்றும் குப்பை கழிவுகளை கன்னியாகுமரி பகவதியம்மன் கோயில் கிழக்குவாசல் பகுதியில் உள்ள கடலில் கொட்டுகின்றனர்.

படகு இல்லம் அருகேயும், திரிவேணி சங்கமம் மற்றும் சூரிய அஸ்தமன மையம் அருகே இளநீர், நுங்கு கழிவுகள், பிளாஸ்டிக் பொருட்கள் குவிந்து கிடக்கின்றன. இவற்றை அகற்ற முறையான நடவடிக்கை எடுக்காததால் துர்நாற்றம் வீசுவதுடன், கடலும் மாசடைந்து வருகிறது’ என்றார்.

குப்பை தொட்டி தேவை

கன்னியாகுமரி பேரூராட்சியினர் இங்கு அதிகமாக சுற்றுலா பயணி கள் கூடும் மையங்களில் குப்பை தொட்டிகளை வைக்க நடவடிக்கை எடுக்காதது அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது. இதுகுறித்து `தி இந்து’ நாளிதழிடம் சுற்றுச்சூழல் கல்வியாளர் டேவிட்சன் கூறும் போது, `3 கடலும் சங்கமிக்கும் புனிதமான கன்னியாகுமரி மாசடைந்து வருகிறது. இங்கு வருவோர் குளித்துவிட்டு திரிவேணி சங்கமத்திலே வேட்டி, சட்டைகளை கழற்றி வீசுகின்றனர். அரசு தரப்பில் கட்டுப்பாடு இருந்தாலும் சுகாதார த்தை பேணுவதில் மக்களும் ஒத்துழைக்க வேண்டும். குப்பை கழிவுகளை சுற்றுலா பயணிகள் கடலில் வீசி எறிகின்றனர். அதேவேளை, கன்னியாகுமரி பேரூராட்சியினரும் கடற்கரை ஓரத்தி லேயே குப்பைகளை கொட்டுகின்றனர்.

கடல் உயிரினங்கள் பாதிப்பு

கடலில் கொட்டப்படும் குப்பை, பிளாஸ்டிக் கழிவுகளால் கடல் உயிரினங்களுக்கு அச்சுறுத்தல் ஏற்பட்டுள்ளது. கன்னியாகுமரி கடலில் அரிய வகை ஆமைகள், டால்பின், திமிங்கலம், சுறாக்கள் அதிகமாக உள்ளன. இவை அவ்வப் போது இறந்து கரை ஒதுங்குவதற்கு பிளாஸ்டிக் மற்றும் குப்பை கழிவுகளில் உள்ள மாசடைந்த பொருட்களை உண்பதும் காரணம் என தெரியவந்துள்ளது. எனவே பிளாஸ்டிக், குப்பையில் லாத கன்னியாகுமரி என்பது பெயர ளவுக்கு இல்லாமல் நடைமுறைக்கு வரவேண்டும்’ என்றார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x