Published : 16 Jun 2015 10:07 AM
Last Updated : 16 Jun 2015 10:07 AM

மணல் குவாரிக்கு எதிராகப் போராடும் களத்தூர் மக்களுடன் விஜயகாந்த், திருமாவளவன் சந்திப்பு: கைதானவர்களை விடுவிக்கக் கோரிக்கை

மணல் குவாரிக்கு எதிராக போராடியதால் கைது செய்யப் பட்ட களத்தூர் மக்களை விடுவிக்காவிட்டால் போராட்டம் நடத்தப்படும் என தேமுதிக தலைவர் விஜயகாந்தும் விடுதலைச் சிறுத்தைகள் கட்சித் தலைவர் தொல். திருமாவளவனும் அறிவித் துள்ளனர்.

வேலூர் மாவட்டம் காவேரிப் பாக்கம் அடுத்துள்ள களத்தூரில் மணல் குவாரி அமைப்பதற்கு கிராம மக்கள் கடும் எதிர்ப்பு தெரிவிப்பதுடன் தொடர் போராட்டங்களில் ஈடுபட்டுள்ளனர். கடந்த வாரம் களத்தூர் கிராமத்தைச் சேர்ந்த 19 பேர் கைது செய்யப்பட்டனர். இவர்களை விடுவிக்கக்கோரி வியாழக்கிழமை இரவு போராட்டத்தில் ஈடுபட்ட பொதுமக்களுக்கும் போலீஸாருக் கும் இடையே கைகலப்பு ஏற்பட்டது. அப்போது, போலீஸ் வாகனத்தை சேதப்படுத்திய வழக்கில் கிராம மக்கள் 13 பேர் கைது செய்யப்பட்டனர்.

கைது செய்யப்பட்டவர்களை விடுவிக்கக்கோரி, களத்தூர் கிராம மக்கள் கோயிலில் தஞ்சமடைந்து அங்கேயே சமைத்து சாப்பிட்டு போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். இந்நிலையில், தொடர்ந்து 4-வது நாளாக போராட்டத்தில் ஈடுபட்டவர்களை, தேமுதிக தலை வர் விஜயகாந்தும் விடுதலைச் சிறுத்தைகள் கட்சித் தலைவர் தொல். திருமாவளவனும் நேற்று காலை தனித்தனியே சந்தித்தனர்.

போராட்டத்தில் ஈடுபட்டுள்ள வர்களை சந்தித்துவிட்டு விஜ யகாந்த் கூறும்போது, ‘‘3 அடி ஆழத்துக்கு மணல் அள்ள அனுமதி கொடுத்தால் 100 அடிக்கு தோண்டிவிடுகிறார்கள். ஆளும்கட்சியினரின் முறை கேடுகளுக்கு முற்றுப்புள்ளி வைக்க வேண்டும். இந்த விவகாரத்தில் கைது செய்யப் பட்டவர்களை உடனடியாக விடுவிக்காவிட்டால் நானே போராட்டத்தில் ஈடுபடுவேன். திமுக, அதிமுக என இரண்டு ஆட்சிகளிலும் மணல் கடத்தல் தொடர்கிறது’’ என்றார்.

திருமாவளவன்

களத்தூர் கிராமத்தில் மணல் குவாரி அமைக்க எதிர்ப்பு தெரிவித்தும், போலீஸாரால் கைது செய்யப்பட்டவர்களை விடுவிக்கக்கோரியும் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டுள்ள பொதுமக்களை விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் தலைவர் தொல்.திருமாவளவன் நேற்று சந்தித்துப் பேசினார். பின்னர், அவர் செய்தியாளர்களிடம் கூறும்போது, ‘‘தலிக் கிராமங்களில் போலீஸார் தாக்குதல் நடத்துவது தொடர் கதையாகிவருகிறது. இதை முதல்வர் ஜெயலலிதா கவனத்தில் கொள்ள வேண்டும்.

கைது செய்யப்பட்ட பொதுமக்களை எந்த நிபந்தனையும் இன்றி உடனடியாக விடுதலை செய்ய வேண்டும். பொதுமக்கள் மீது தாக்குதல் நடத்திய போலீஸார் மீது ஒழுங்கு நடவடிக்கை எடுக்க வேண்டும். இதை வலியுறுத்தி வரும் 19-ம் தேதி ராணிப்பேட்டையில் எனது தலைமையில் ஆர்ப்பாட்டம் நடத்தப்படும்’’ என்றார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x