Published : 26 Jun 2015 08:53 AM
Last Updated : 26 Jun 2015 08:53 AM
கல்வி நிலையங்களில் சிறுபான்மை இன மாணவ, மாணவிகளின் உரிமையைப் பாதுகாக்க கோரிய மனுவுக்கு பதிலளிக்க மத்திய, மாநில அரசுகளுக்கு உயர் நீதிமன்றம் உத்தரவிட்டது.
தமிழகத்தில் உள்ள கல்வி நிலையங்களில் பயிலும் சிறுபான்மையின மாணவ, மாணவிகளின் உரிமைகளைப் பாதுகாக்க அனைத்து மாவட்ட ஆட்சியர்களுக்கும் உத்தரவிடக் கோரி புதிய தமிழகம் கட்சியின் மாநில இளைஞரணிச் செயலர் வழக்கறிஞர் எஸ்.பாஸ்கர் மதுரம் உயர் நீதிமன்ற மதுரை கிளையில் பொதுநலன் மனு தாக்கல் செய்துள்ளார்.
அந்த மனுவில், திருச்சி பாலக்கரையில் தனியார் பள்ளியில் ரமலான் நோன்பு கடைப்பிடித்துவரும் இஸ்லாமிய மாணவிகளை நிலவேம்பு கசாயம் குடிக்க வேண்டும் என கட்டாயப்படுத்தியுள்ளனர். தஞ்சாவூர், திருவாரூர் மாவட்டங்களில் உள்ள தனியார் குழும கல்லூரியில் பயிலும் இஸ்லாமிய மாணவிகள் பர்தா, புர்கா அணிந்துவர தடை விதித்துள்ளனர். இதுபோன்று கல்வி நிலையங்களில் சிறுபான்மை இன மாணவ, மாணவிகளுக்கு எதிராக நடைபெறும் செயல்களை தடுக்க உரிய நடவடிக்கை எடுக்குமாறு கல்வித்துறை அதிகாரிகளுக்கு மாவட்ட ஆட்சியர்கள் உத்தரவிட வேண்டும் எனக் கூறப்பட்டிருந்தது.
இந்த மனு நீதிபதிகள் ஏ.செல்வம், வி.எஸ்.ரவி ஆகியோர் கொண்ட அமர்வு முன் நேற்று விசாரணைக்கு வந்தது.
மனுதாரர் சார்பில் வழக்கறிஞர் பீட்டர் ரமேஷ்குமார் வாதிடும்போது, சிறுபான்மையினரின் அடிப்படை உரிமைகளில் கல்வி நிறுவனங்கள் தலையிடுவதை அனுமதிக்கக் கூடாது என்றார்.
பின்னர் மனுவுக்கு மத்திய மனிதவள மேம்பாட்டுத் துறைச் செயலர், தமிழக தலைமைச் செயலர், தமிழக காவல்துறை தலைவர் ஆகியோர் பதிலளிக்க நோட்டீஸ் அனுப்ப நீதிபதிகள் உத்தரவிட்டனர். அடுத்த விசாரணை ஜூலை 3-ம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT