Published : 16 Jun 2015 10:04 AM
Last Updated : 16 Jun 2015 10:04 AM
முல்லை பெரியாறு அணையில் ஜூன் 22-ம் தேதி மூவர் குழு ஆய்வு செய்ய உள்ளது. அன்றைய தினம் நடைபெறும் கூட்டத்தில், கேரள அரசின் முயற்சிக்கு எதிர்ப்பு தெரிவித்து தமிழக பிரதிநிதி பேச உள்ளார்.
உச்ச நீதிமன்ற உத்தரவுப்படி, கடந்த ஆண்டு மத்திய நீர்பாசனத்துறை ஆணையத்தின் தலைமைப் பொறியாளர் எல்.ஏ.வி. நாதன் தலைமையில் தமிழக பிரதிநிதியாக அப்போதைய பொதுப்பணித்துறை செயலாளர் சாய்குமார், கேரள பிரதிநிதியாக அம்மாநில நீர்பாசனத்துறை கூடுதல் செயலர் குரியன் ஆகியோர் மூவர் குழுவில் நியமிக்கப்பட்டனர். இந்தக் குழு கடந்த ஆண்டு ஜூலை 17-ம் தேதி கூடி அணையின் நீர் மட்டத்தை 142 அடியாக உயர்த்தும் பொருட்டு, அணையை ஆய்வு மேற்கொண்டது. அதன்பின் ஜூன் 20-ம் தேதி 142 அடியாக நீர் தேக்கப்பட்டது. இதன் பின்னர் 3 ஆய்வுக் கூட்டங்கள் நடைபெற்றன. இக்கூட்டத்தின்போது வல்லக் கடவு வழியாக பெரியாறு அணை வரை புதிய சாலை மற்றும் அணை பகுதியில் மின்சார வசதி மேற்கொள்வது குறித்து பேசப்பட்டது.
ஆனால், எந்த பணிகளையும் நடைபெற விடாமல் கேரள வனத்துறையினர் தடுத்து வருகின்றனர்.
இதற்கிடையில், அணையில் இருந்து சுமார் 500 மீ. தூரத்தில் புதிய அணை கட்டும் முயற்சியில் ஈடுபட்டு கேரள அரசு ஆய்வு மேற்கொண்டு வருகிறது.
இதை உடனடியாக நிறுத்தி ஆய்வுப் பணி மேற்கொள்ள அனுமதிக்கக் கூடாது என தமிழக முதல்வர் ஜெயலலிதா, கடந்த 4 நாட்களுக்கு முன்பு பிரதமருக்கு கடிதம் எழுதினார். இந்நிலையில், ஜூன் 22-ம் தேதி மூவர் குழு பெரியாறு அணையை ஆய்வு செய்ய உள்ளது.
இதுகுறித்து ‘தி இந்து’விடம் பொதுப்பணித் துறை அதிகாரி ஒருவர் கூறும்போது, மூவர்குழு ஆய்வு கடந்த மாதம் நடைபெற இருந்தது. ஆனால், தவிர்க்க முடியாத காரணங்களால், 2 முறை தேதி குறிப்பிடப்படாமல் ஆய்வுக் கூட்டம் ஒத்திவைக்கப்பட்டது. தற்போது 22-ம் தேதி அணையை ஆய்வு செய்ய மூவர் குழு தலைவர் அனுமதி வழங்கி உள்ளார்.
ஆய்வுக்குப் பின், குமுளியில் அன்றைய தினம் நடைபெறும் கூட்டத்தில் கேரள அரசின் புதிய அணை ஆய்வு தொடர்பாக எதிர்ப்பு தெரிவிக்கப்படும் என் றார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT