Published : 06 Jun 2015 08:46 AM
Last Updated : 06 Jun 2015 08:46 AM

மாணவர் சேர்க்கையின்போது நன்கொடை வசூலிக்கக் கூடாது: தலைமை ஆசிரியர்களுக்கு அரசு உத்தரவு

மாணவர் சேர்க்கையின்போதும், மாற்றுச்சான்றிதழ் வழங்கும் போதும் கட்டாய நன்கொடை வசூலிக்கக் கூடாது என்று தலைமை ஆசிரியர்களுக்கு பள்ளிக்கல்வி இயக்குநர் எஸ்.கண்ணப்பன் உத்தரவிட்டுள்ளார்.

இதுதொடர்பாக மாவட்ட முதன்மைக் கல்வி அதிகாரிகள் மற்றும் மாவட்ட கல்வி அதிகாரி களுக்கு அவர் அனுப்பியுள்ள ஓர் உத்தரவில் கூறியிருப்பதாவது:

பள்ளிக் கல்வித்துறையின் கீழ் செயல்படும் அரசு பள்ளிகள், அரசு உதவி பெறும் பள்ளிகள் மற்றும் தனியார் சுயநிதி பள்ளிகளில் மாண வர் சேர்க்கை மற்றும் மாணவர் களுக்கு மாற்றுச்சான்றிதழ் (டி.சி.) வழங்கும்போது நன்கொடை வசூல் செய்வதாக அவ்வப்போது புகார்கள் வந்தவண்ணம் உள்ளன.

மாணவர் சேர்க்கையின்போது, அரசு நிர்ணயித்துள்ள தொகையை தவிர பிற நன்கொடை ஏதும் கட்டாயமாக வசூல் செய்யக் கூடாது. எனவே, கல்வித்துறை அதிகாரிகள் தங்கள் மாவட்டத்தில் அரசு, அரசு உதவி பெறும் பள்ளிகள் மற்றும் தனியார் பள்ளிகளில் இத்தகைய கட்டாய நன்கொடை வசூல் செய்வதை தவிர்க்க அனைத்து தலைமை ஆசிரியர்கள் மற்றும் பள்ளி நிர்வாகிகளுக்கு உரிய அறிவுரை வழங்க வேண்டும்.

விழிப்புடன் செயல்பட வேண்டும்

இதுபோன்ற புகார்கள் வரப் பெறாமல் விழிப்புடன் செயல் படுமாறு கல்வி அதிகாரிகள் கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.

இவ்வாறு அந்த உத்தரவில் கூறப்பட்டுள்ளது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x