Published : 18 Jun 2015 08:18 AM
Last Updated : 18 Jun 2015 08:18 AM

அரசுப் போக்குவரத்துக் கழக நிதியில் முறைகேடு: முன்னாள் அமைச்சர் கே.என்.நேரு உட்பட 18 பேர் மீது லஞ்ச ஒழிப்புத் துறை வழக்கு பதிவு

தமிழ்நாடு அரசுப் போக்குவரத்துக் கழகத்தின் நிதியை முறைகேடாக செலவிட்டதாக எழுந்த புகாரின் பேரில் முன்னாள் அமைச்சர் கே.என்.நேரு உட்பட போக்குவரத்துக் கழக அதிகாரிகள் 18 பேர் மீது திருச்சி ஊழல் தடுப்பு மற்றும் கண்காணிப்புப் பிரிவு போலீஸார் நேற்று முன்தினம் வழக்கு பதிவு செய்துள்ளனர். இதில் எனக்கு எந்த சம்பந்தமும் இல்லை என்று கே.என்.நேரு தெரிவித்துள்ளார்.

கடந்த திமுக ஆட்சிக் காலத் தில் போக்குவரத்துத் துறை அமைச்சராக கே.என்.நேரு இருந்தபோது தமிழ்நாடு அரசுப் போக்குவரத்துக் கழகத்தின் நிதியில் அமைச்சரின் உறவினர்கள், கட்சிப் பிரமுகர்கள் ஆகியோருக்கு உணவு, தங்குமிடம், போக்குவரத்து உள்ளிட்ட வசதிகளை செய்து தந்த வகையில் ரூ.32.88 லட்சம் செலவிடப்பட்டதாக கூறப்படுகிறது.

இந்த நிதி முறைகேடு தொடர்பாக நேரு மற்றும் அதிகாரிகள் மீது வழக்கு பதிவு செய்ய வேண்டுமென அரசுப் போக்குவரத்துக் கழகத்தில் பணி யாற்றி ஓய்வுபெற்ற தஞ்சாவூரைச் சேர்ந்த ஊழியர் கோவிந்தராஜு என்பவர் உயர் நீதிமன்ற மதுரை கிளையில் அண்மையில் மனுத் தாக்கல் செய்தார்.

இந்த மனுவை விசாரித்த நீதிபதி எஸ்.நாகமுத்து, இது தொடர்பாக வழக்கு பதிவு செய்ய திருச்சி ஊழல் தடுப்பு மற்றும் கண்காணிப்புப் பிரிவு போலீஸாருக்கு ஜூன் 5-ம் தேதி உத்தரவிட்டார். இதைத் தொடர்ந்து டிஎஸ்பி உலகநாதன் தலைமையிலான போலீஸார் விசாரணை மேற்கொண்டு, கே.என்.நேரு, அரசுப் போக்குவரத்துக் கழகத்தில் அப்போது பணியாற்றி வந்த மேலாண் இயக்குநர்கள், பொதுமேலாளர்கள் உள்ளிட்ட 18 பேர் மீது வழக்கு பதிவு செய்துள்ளனர்.

எவ்வித சம்பந்தமும் இல்லை

இதுதொடர்பாக முன்னாள் அமைச்சர் கே.என்.நேரு நேற்று வெளியிட்டுள்ள அறிக்கை விவரம்: திருச்சி மண்டல தமிழ்நாடு போக்குவரத்துக் கழகத்தின் நிர்வாகக் குழு ஒப்புதல் பெறாமல் கழகத்தின் நிதியை செலவிட்டதில் முறைகேடு நடந்துள்ளதாக துணை மேலாளர் (கணக்கு) அளித்த புகாரின்பேரில் 18 அதிகாரிகள் மீது முறையான துறைரீதியான நடவடிக்கை எடுக்க பரிந்துரை செய்யப்பட்டது.

விசாரணை அறிக்கையின் அடிப்படையில் அரசு தொடர்பு டைய அதிகாரிகள் மீது ஒழுங்கு நடவடிக்கை எடுக்க போக்குவரத்துக் கழக மேலாண் இயக்குநருக்கு உத்தரவிட்டு, அதனடிப்படையில் போக்குவரத்து துறையின் அரசாணை 22 (நாள் 27.08.2012) பிறப்பிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் தஞ்சாவூரை சேர்ந்த கோவிந்தராஜ் இந்த முறைகேடு தொடர்பாக நடவடிக்கை எடுக்க ஊழல் தடுப்பு மற்றும் கண்காணிப்புப் பிரிவுக்கு உத்தரவிடுமாறு 2015 ஏப்.11-ல் உயர் நீதிமன்றத்தில் மனு செய்தார். 18 அதிகாரிகள் மீது ஒழுங்கு நடவடிக்கை எடுப்பதற்கான முடிவு போக்குவரத்துத் துறையின் முதன்மைச் செயலாளர் முன்பு நிலுவையில் உள்ளது. துறைரீதியான நடவடிக்கை சட்டம் சார்ந்துதான் எடுக்கப்பட்டுள்ளது என தெரிவிக்கப்பட்டும், இதை ஏற்றுக்கொள்ளாத உயர் நீதிமன்றம் வழக்கு பதிவு செய்ய உத்தரவிட்டுள்ளது.

இந்த உத்தரவிலோ அல்லது மனுவிலோ என் பெயர் இல்லாத நிலையில் என்னை முதல் எதிரியா கச் சேர்த்து முதல் தகவல் அறிக்கை தாக்கல் செய்யப்பட்டுள்ளது. இது தொடர்பாக முன்பு நடைபெற்ற விசாரணைகளுக்கு என்னை அழைக்கவோ, விசாரிக்கவோ இல்லை. எனக்கும் இந்த வழக்குக் கும் எந்த சம்பந்தமும் இல்லை என கே.என்.நேரு தெரிவித்துள்ளார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x