Published : 17 Jun 2015 07:41 AM
Last Updated : 17 Jun 2015 07:41 AM

கட்டிட சீரமைப்பு குறித்து விரிவான அறிக்கை வேண்டும்: மெட்ரோ ரயிலுக்கு மாநகராட்சி கடிதம்

மெட்ரோ ரயில் பணிகளால் பாதிக்கப்படும் கட்டிடங்களில் சீரமைப்பு நடவடிக்கைகள் குறித்து விரிவான அறிக்கை வேண்டும் என்று மெட்ரோ ரயில் நிர்வாகத்துக்கு மாநக ராட்சி அதிகாரிகள் கடிதம் எழுதியுள்ளனர்.

சென்னை சிந்தாதிரிப் பேட்டையில் சமீபத்தில் மெட்ரோ ரயில் பணி காரணமாக வீடுகளில் விரிசல்கள் ஏற்பட்டன. இதனால் அங்கு வசிப்பவர்கள் அச்சத்தில் உள்ளனர். எனவே அப்பகுதியில் மெட்ரோ ரயில் பணிகளால் ஏற்படும் பாதிப்புகளை அளவிடும் கருவிகள் வீடுகளில் பொருத்தப்பட்டுள்ளன.

மெட்ரோ ரயில் இது போன்ற கருவிகளை ஏற்கெனவே அண்ணா நகர் உள்ளிட்ட பகுதியில் பொருத்தியுள்ளது. இந்த கருவியின் மூலம் கட்டிடத்துக்கு பாதிப்பு இருக்கிறதா இல்லையா, எவ்வளவு பாதிப்பு இருக்கிறது என்று அளவிட முடியும்.

இதைத் தொடர்ந்து மெட்ரோ ரயில் பணிகள் காரணமாக பாதிக்கப்பட்டுள்ள கட்டிடங்களில் என்னென்ன சீரமைப்புப் பணிகளை மெட்ரோ ரயில் நிர்வாகம் மேற்கொள்ளப்போகிறது என்று விரிவான அறிக்கை அளிக்கும்படி மாநகராட்சி கேட்டுக்கொண்டுள்ளது..

இது குறித்து மாநகராட்சி அதிகாரி கூறும்போது, “கட்டிடங்களுக்கு ஏதேனும் பாதிப்பு ஏற்படும்போது, மாநகராட்சி அதிகாரிகளைத்தான் முதலில் கேள்வி கேட்கின்றனர். ஆனால் மெட்ரோ ரயில் நிர்வாகம்தான் கட்டிட சீரமைப் புக்கு பொறுப்பாகும். எனவே மெட்ரோ ரயில் என்னென்ன சீரமைப்பு நடவடிக்கைகளை மேற்கொள்ளும் என்று கேட்டுள் ளோம். சென்னை ஐஐடி-யின் பேராசிரியர்களைக் கொண்டு சீரமைப்புக்கான ஆய்வு நடத்தப் படும் என்று தெரிவிக்கப் பட்டுள்ளது” என்றார்.

சிந்தாதிரிப்பேட்டையில் ஒரு மாதத்துக்கு முன்பு, வெங்கடேசகிராமணி தெருவில் இருந்த மாநகராட்சி மருந்தக கட்டிடத்தில் விரிசல் ஏற்பட்டதால் மருந்தகம் வேறு இடத்துக்கு மாற்றப்பட்டது. தற்போது அந்த கட்டிடத்தில் சீரமைப்புப் பணிகளை மெட்ரோ ரயில் நிர்வாகம் மேற்கொண்டு வருகிறது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x