Published : 02 Jun 2015 07:40 AM
Last Updated : 02 Jun 2015 07:40 AM
தமிழக பால்வளத் துறை அமைச்சர் ரமணாவின் சித்தப்பா மகன் கொலை வழக்கில் திருநாவுக்கரசு என்பவரை குண்டர் தடுப்பு சட்டத்தில் கைதுசெய்ய திருவள்ளூர் மாவட்ட ஆட்சியர் பிறப்பித்த உத்தரவை ரத்து செய்து சென்னை உயர் நீதிமன்றம் நேற்று உத்தரவிட்டது.
திருவள்ளூர் அருகே உள்ள வேப்பம்பட்டு பகுதியைச் சேர்ந்தவர் ரவி(45). தமிழக பால்வளத் துறை அமைச்சர் ரமணாவின் சித்தப்பா மகனான இவர், பெருமாள்பட்டு பகுதியில் ஹார்டுவேர் கடை நடத்தி வந்தார். ரியல் எஸ்டேட் தொழிலிலும் ஈடுபட்டு வந்த இவரை, பெருமாள்பட்டு ஊராட்சி மன்ற அலுவலகம் அருகே 2014-ம் ஆண்டு அக்டோபர் 14-ம் தேதி 4 பேர் கொண்ட கும்பல் வெட்டிக் கொலை செய்தது.
இந்த கொலை தொடர்பாக செவ்வாய்ப்பேட்டை ஊராட்சி மன்றத் தலைவர் வெங்கடேசன் (54), ரியல் எஸ்டேட் அதிபர் நெமிலிச்சேரி திருநாவுக்கரசு (45) உள்பட 9 பேர் கைது செய்யப்பட்டு புழல் சிறையில் அடைக்கப்பட்டனர். இவர்களில் வெங்கடேசன், திருநாவுக்கரசு உள்பட 6 பேரை குண்டர் தடுப்புக் காவல் சட்டத்தின் கீழ் சிறையில் அடைக்க வேண்டும் என்று திருவள்ளூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அளித்த பரிந்துரையின் பேரில் 6 பேரையும் குண்டர் தடுப்புச் சட்டத்தின் கீழ் சிறையில் அடைக்க திருவள்ளூர் மாவட்ட ஆட்சியர் உத்தரவிட்டார்.
இந்த உத்தரவை எதிர்த்து திருநாவுக்கரசுவின் மனைவி உதயகுமாரி சென்னை உயர் நீதிமன்றத்தில் மனுதாக்கல் செய்தார். உயர் நீதிமன்ற நீதிபதிகள் எஸ்.தமிழ்வாணன், சி.டி.செல்வம் ஆகியோர் கொண்ட டிவிஷன் பெஞ்ச் இம்மனுவை விசாரித்து, இவ்வழக்கு தொடர்பான அறிக்கை, தமிழில் சரிவர மொழிபெயர்ப்பு செய்யப்படவில்லை. அத்துடன் ஆங்கில அறிக்கையில் இல்லாத இந்திய தண்டனை சட்டப்பிரிவு ஒன்று தமிழ் அறிக்கையில் சேர்க்கப்பட்டிருக்கிறது. இதன் காரணமாக இவ்வழக்கில் மனுதாரரின் கணவரை (திருநாவுக்கரசு) குண்டர் தடுப்புக் காவல் சட்டத்தின் கீழ் சிறையில் அடைக்க திருவள்ளூர் மாவட்ட ஆட்சியர் பிறப்பித்த உத்தரவு ரத்து செய்யப்படுகிறது என்று நீதிபதிகள் உத்தரவிட்டனர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT