Published : 02 Jun 2015 04:24 PM
Last Updated : 02 Jun 2015 04:24 PM
மேட்டூர் அருகே பொது நிதியை முறைகேடாக பயன்படுத்தும் பாமக ஊராட்சி மன்ற தலைவரைக் கண்டித்து அதிமுக உறுப்பினர்கள் மாவட்ட ஆட்சியரிடம் ராஜினாமா கடிதத்தை வழங்கினர்.
சேலம் மாவட்டம் மேட்டூர் அருகே உள்ள மேச்சேரி ஒன்றியத்துக்கு உட்பட்ட கூனாண்டியூர் ஊராட்சி தலைவராக பாமக-வைச் சேர்ந்த கோவிந்தன் என்பவர் பொறுப்பு வகித்து வருகிறார். இந்த ஊராட்சியில் உள்ள மொத்த உறுப்பினர்களில் ஐந்து பேர் அதிமுக- வை சேர்ந்தவர்கள்.
இந்த ஐந்து பேரும், நேற்று சேலம் ஆட்சியர் அலுவலகத்துக்கு வந்தனர். பாமக ஊராட்சி மன்ற தலைவர் பொது நிதியை முறைகேடாக பயன்படுத்தி வருகிறார். மக்களுக்கான அடிப்படை வசதிகள் செய்து கொடுக்க மறுப்பதாக குற்றம்சாட்டி, ஊராட்சி மன்ற உறுப்பினர்கள் ஐந்து பேரும் ராஜினாமா கடிதத்தை தனித்தனியாக ஆட்சியர் க.மகரபூஷணத்திடம் வழங்கினர்.
இதுகுறித்து அவர்கள் செய்தியாளர்களிடம் கூறும் போது, ‘கடந்த நான்கு ஆண்டுகளாக மக்களுக்கு தேவையான அடிப்படை வசதிகள் எதுவும் நிறைவேற்றவில்லை. ஊராட்சி தலைவராக உள்ள பாமக- வைச் சேர்ந்த கோவிந்தன், எந்த பணிகளுக்கும் முறையாக நிதி ஒதுக்குவது இல்லை .
ஊராட்சிக்கு வரும் பொது நிதியை முறைகேடாக பயன்படுத்தி வருகிறார். மக்களுக்கு செய்து கொடுக்கக் கூடிய பணிகளை செய்திடாமல் காலம் தாழ்த்தி வருகிறார். இது குறித்து சம்பந்தப்பட்ட ஊராட்சியிலும், மாவட்ட ஆட்சியரிடமும் பல முறை மனு அளித்தும் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. எனவே நாங்கள் ஊராட்சி மன்ற உறுப்பினர் பதவியை ராஜினாமா செய்யும் முடிவை எடுத்து, ஆட்சியரிடம் அதற்கான ராஜினாமா கடிதத்தை அளித்துள்ளோம், என்றனர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT