Published : 10 May 2014 12:42 PM
Last Updated : 10 May 2014 12:42 PM

முல்லைப் பெரியாறு பிரச்சினையில் அரசியல் ஆதாயம் தேட வேண்டாம்: ஜெயலலிதாவுக்கு கருணாநிதி வலியுறுத்தல்

முல்லைப் பெரியாறு பிரச்சினையை அரசியலாக்கி ஆதாயம் தேடாமல், நிர்வாக ரீதியான தொடர் நடவடிக்கைகளை மேற்கொள்ள ஜெயலலிதாவுக்கு திமுக தலைவர் கருணாநிதி வலியுறுத்தியுள்ளார்.

மேலும், முல்லைப் பெரியாறு பிரச்சினையை அரசியலாக்கி, சாத்தான் வேதம் ஓதுவதைப் போல நடந்து கொள்வது யார் என்பதை உணர்வார்கள் என்றும் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக அவர் வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில்: "முல்லைப் பெரியாறு பிரச்சினையில் உச்ச நீதிமன்றம் தீர்ப்பு குறித்து செய்தியாளர்கள் என்னிடம் கருத்து கேட்டபோது, 'முல்லைப் பெரியாறு பற்றி இன்று வந்துள்ள தீர்ப்பு மகிழ்ச்சிக்குரியது' என்று சுருக்கமாகப் பதில் அளித்தேன்.

ஆனால், ஜெயலலிதா உச்ச நீதிமன்றத்தின் தீர்ப்பு பற்றி வெளியிட்ட அறிக்கையில் வேண்டுமென்றே வழக்கம்போல என்மீது அரசியல் ரீதியாகக் குற்றச்சாட்டுகளைச் சுமத்தியிருந்தார்.

அதற்குப் பதிலளித்திடும் வகையிலேதான் கடந்த 8-ம் தேதி அறிக்கை வெளியிட்டிருந்தேன்.

தற்போது (10-5-2014) ஜெயலலிதா “முல்லைப் பெரியாறு பிரச்சினையை அரசியலாக்கி ஆதாயம் காண முயற்சிக்க வேண்டாம்” என்று எனக்கு அறிவுரை கூறியுள்ளார்.

ஜெயலலிதா தன்னுடைய அறிக்கைகளில் அடிக்கடி “சாத்தான் வேதம் ஓதுகிறது” என்று குறிப்பிடுவது வழக்கம். முல்லைப் பெரியாறு பிரச்சினையை அரசியலாக்கி, சாத்தான் வேதம் ஓதுவதைப் போல நடந்து கொள்வது யார் என்பதை, என்னுடைய அறிக்கையையும், ஜெயலலிதாவினுடைய அறிக்கைகளையும் ஒப்பிட்டுப் பார்க்கும் தமிழக மக்கள் நன்றாகவே உணர்ந்து கொள்வார்கள்.

ஜெயலலிதா தற்போது வெளியிட்டுள்ள அறிக்கையில் “கேரளா மற்றும் சென்னை உயர் நீதிமன்றங்களில் தாக்கல் செய்யப்பட்டு நிலுவையில் இருந்த வழக்குகளை உச்ச நீதிமன்றம் விசாரித்து உத்தரவு பிறப்பிக்கக் கோரி, தமிழ்நாடு அரசு மாற்றல் மனு ஒன்றை 1998ஆம் ஆண்டு உச்ச நீதிமன்றத்தில் தாக்கல் செய்தது. அதற்குப் பிறகு மூன்று ஆண்டுகள் தமிழகத்தின் ஆட்சியில் இருந்த தி.மு.க. எவ்வித நடவடிக்கையும் எடுக்கவில்லை” என்று ஜெயலலிதா முல்லைப் பெரியாறு

பிரச்சினையை மீண்டும் அரசியலாக்கி ஆதாயம் தேட எத்தனித்திருக்கிறார்.

உச்ச நீதிமன்றத்தில் மாற்றல் மனு தாக்கல் செடீநுததற்குப் பிறகு தி.மு.க அரசு தொடர்ந்து எப்போதும் போல முல்லைப் பெரியாறு பிரச்சினையில் ஆக்கப்பூர்வமான நடவடிக்கைகளை எடுத்து வந்தது.

எனினும் எல்லாவற்றையும் அரசியலாகவே பார்க்க நினைக்கும் ஜெயலலிதா, இனியாவது குறைந்தபட்சம் முல்லைப் பெரியாறு பிரச்சினையையாவது அரசியலாக்கி ஆதாயம் தேடாமல், அது

விவசாயிகளின் வாழ்வாதாரப் பிரச்சினை - பொதுமக்களின் குடிதண்ணீர்ப் பிரச்சினை என்பதால், அரசு நிர்வாக ரீதியான தொடர் நடவடிக்கைகளை முனைப்புடன் மேற்கொள்வதே நல்லது". இவ்வாறு கருணாநிதி கூறியுள்ளார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x