Published : 10 Jun 2015 08:08 AM
Last Updated : 10 Jun 2015 08:08 AM
தமிழகத்தில் காசநோயாளிகளுக்கு மாதந்தோறும் 1000 ரூபாயை காச நோய் உதவித் தொகையாக அரசு வழங்கி வந்தது. இந்தத் தொகை கடந்த 6 மாதங்களாக வழங்கப்படாததால் சத்துமிகுந்த உணவுகளை வாங்க முடியாமல் காசநோயாளிகள் அவதியுறு கின்றனர்.
தமிழகத்தில் தற்போது 1 லட்சத்து 45 ஆயிரம் காசநோயாளிகள் சிகிச்சை பெறுகின்றனர். திண்டுக்கல், திருநெல்வேலி, சிவகங்கை, விருதுநகர், மதுரை, அரியலூர், பெரம்பலூர், கிருஷ்ணகிரி மற்றும் சென்னை புறநகர் மாவட்டங்களில் இந்நோய் பாதிப்பு அதிகமாக உள்ளது. திண்டுக்கல் மாவட்டத்தில் மட்டும் 3,500 காசநோயாளிகள் உள்ளனர்.
காசநோயால் பாதிக்கப்பட்டவர்கள் சிகிச்சையுடன் முட்டை, கீரை, காய்கறி, சுண்டல், பருப்பு போன்ற சத்துள்ள உணவுகளை உண்ண வேண்டும். சத்துள்ள உணவுகளை உண்ணாத காசநோயாளிகளுக்கு, மாத்திரைகளால் பக்கவிளைவு ஏற்படலாம். இந்நோய் பாதித்த கூலி வேலை செய்யும் பலர் சத்துள்ள உணவுகளை உண்ண முடியாமலும், சிகிச்சையைத் தொடர முடியாமலும் இருந்ததைக் கவனத்தில் கொண்ட தமிழக அரசு, கடந்த 2 ஆண்டுகளுக்கு முன் ஏழை காசநோயாளிகள் சத்துள்ள உணவுகளை வாங்க வருவாய்த் துறை மூலம் மாதம் ரூ.1000 உதவித் தொகை வழங்கி வந்தது. இந்த திட்டத்தில் உதவித்தொகை பெற காசநோயாளிகளுக்கு, மாவட்ட காசநோய் சிகிச்சை பிரிவு துணை இயக்குநர் சான்றளிப்பதுடன் உழவர் பாதுகாப்பு அட்டையையும் பெற்றிருக்க வேண்டும். அதனால், சில நோயாளிகள் உழவர் பாதுகாப்பு அட்டை இல்லாமல் இந்த திட்டத்தில் உதவித் தொகை பெற முடியவில்லை. இந்த உதவித் தொகை பெற்ற நோயாளிகள் அந்த பணத்தின் மூலம் பழங்கள், காய்கறிகள் மற்றும் முட்டைகளை வாங்கி உண்டனர்.
இந்நிலையில் கடந்த 6 மாதங்களாக காசநோய் உதவித் தொகை நோயாளிகளுக்கு வழங்கப்படவில்லை. ஒவ்வொரு மாவட்ட காசநோய் சிகிச்சைப் பிரிவில் இருந்து மாதந்தோறும் வருவாய்த் துறைக்கு உதவித் தொகை பெறும் தகுதியுள்ள பயனாளிகள் பட்டியல் அனுப்பியும், வருவாய்த்துறை உதவித் தொகை வழங்காததால் காசநோயாளிகள் சத்துள்ள உணவுகளை வாங்க முடியாமலும், சிகிச்சையைத் தொடர முடியாமல் செல்வதும் அதிகரிக்கும் அபாயம் ஏற்பட்டுள்ளது.
இதுகுறித்து திண்டுக்கல் மாவட்ட காசநோய் சிகிச்சைப் பிரிவு துணை இயக்குநர் (பொ) மங்கையர்க்கரசி கூறியதாவது: ஒவ்வொரு மாதமும் உதவித் தொகை பெறும் தகுதியுள்ள காசநோயாளிகள் பட்டியலை அனுப்பிதான் வருகிறோம். நிதிப் பற்றாக்குறையால் வழங்க முடியவில்லை என்கின்றனர் வருவாய்த் துறையினர். மகப்பேறு உதவித் தொகை போல் இந்த உதவித் தொகை திட்டத்தையும் எங்களிடமே கொடுத்தால் எந்த பிரச்சினையும் இல்லாமல் வழங்கலாம். இது சம்பந்தமாக அரசு கவனத்துக்கு எடுத்துச் செல்லுமாறு அதிகாரி களிடம் வலியுறுத்தி வருகிறோம் என்றார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT