Published : 01 Jun 2015 07:27 AM
Last Updated : 01 Jun 2015 07:27 AM
ஓடும் ரயிலில் பெண் பயணியின் கவனத்தை திசைதிருப்பி கழுத்தில் இருந்த 5.5 சவரன் செயினை மர்ம நபர் நேற்று கொள்ளையடித்து சென்றார்.
நாமக்கல் மாவட்டம் திருச்செங்கோடு அருகேயுள்ள கரட்டுப்பாளையம் பகுதியை சேர்ந்தவர் பன்னீர்செல்வம். இவரது மனைவி சாந்தி(28). இவர்களுக்கு சஞ்ஜய்(11), தருண்(8) சுப(3) ஆகிய மூன்று குழந்தைகள் உள்ளன. இந்த கோடை விடுமுறையில் சாந்தி தனது குழந்தைகளுடன், தெலங்கானாவில் உள்ள வாரங்கலுக்கு பெற்றோரை காணச் சென்றார்.
இந்நிலையில், விடுமுறை முடியும் நிலையில், சொந்த ஊருக்கு செல்ல டேராடூனில் இருந்து மதுரை நோக்கி செல்லும் விரைவு ரயிலில் நேற்று வந்து கொண்டிருந்தார்.
அதிகாலை 2.30 மணி அளவில் கொருக்குப்பேட்டை- பேசின் பிரிட்ஜ் இடையே மெதுவாக வந்து கொண்டிருந்தபோது திடீரென ஒருவன் ரயிலில் ஏறி சாந்தியிடம் பேசி கவனத்தை திசை திருப்பி, அவர் கழுத்தில் இருந்த 5.5 சவரன் செயினை பறித்துக் கொண்டு ஓடும் ரயிலில் இருந்து குதித்து தப்பினான். இதுபற்றி சாந்தி சென்ட்ரல் ரயில்வே போலீசில் புகார் கொடுத்தார்.
இதையடுத்து, போலீஸார் புகார் மீது விசாரணை நடத்தி வருகின்றனர். கோடை விடுமுறை முடிந்து சொந்த ஊருக்கு மக்கள் திரும்புவதால், ரயில்கள் மற்றும் ரயில் நிலையங்களில் மக்கள் கூட்டம் அதிகமாக இருக்கிறது. எனவே, ரயில்களில் பாதுகாப்பை அதிகரிக்க வேண்டுமென பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT