Published : 27 Jun 2015 11:51 AM
Last Updated : 27 Jun 2015 11:51 AM

ஆர்.கே.நகரில் அதிமுக கவுன்சிலர் - டிராபிக் ராமசாமி ஆதரவாளர்களுக்கு இடையே வாக்குவாதம்

ஆர்.கே.நகரில் வாக்குச்சாவடிக்கு வந்த சுயேச்சை வேட்பாளர் டிராஃபிக் ராமசாமிக்கும், அதிமுகவினருக்கும் இடையே கடும் வாக்குவாதம் ஏற்பட்டது.

சென்னை ஆர்.கே.நகரில் நேற்று வாக்குப்பதிவு நடைபெற்றது. இந்திய கம்யூனிஸ்ட் வேட்பாளர் சி.மகேந்திரன், சுயேச்சை வேட்பாளர் டிராஃபிக் ராமசாமி ஆகியோர் வாக்குச்சாவடிகளுக்கு சென்று வாக்குப்பதிவை பார்வையிட்டனர்.

தண்டையார்பேட்டை சேனியம்மன் கோயில் தெருவில் உள்ள வாக்குச் சாவடிக்கு வந்த டிராஃபிக் ராமசாமிக்கும், அதிமுக கவுன்சிலர் அஞ்சுலட்சுமி உள்ளிட்டோருக்கும் கடும் வாக்குவாதம் ஏற்பட்டது. அங்கிருந்த காவலர்கள் இருதரப்பினரையும் சமாதானப்படுத்தி அனுப்பி வைத்தனர்.

வாக்குச்சாவடி அருகே திரண்டிருந்த அதிமுகவினர் தன்னை மிரட்டியதாகவும், தாக்க வந்ததாகவும் தேர்தல் அதிகாரியிடம் டிராஃபிக் ராமசாமி புகார் தெரிவித்தார்.

இதுதொடர்பாக ‘தி இந்து’விடம் ராமசாமி கூறும்போது, ‘‘தேர்தல் விதிகளை மீறி வாக்குச்சாவடிக்கு மிக அருகில் நூற்றுக்கணக்கான அதிமுகவினர் நின்றிருந்தனர். இதனால் வாக்களிக்க வரும் பொதுமக்களுக்கு இடையூறு ஏற்பட்டது. தண்டையார்பேட்டை சேனியம்மன் கோயில் தெருவில் உள்ள வாக்குச்சாவடிக்கு அருகே திரண்டிருந்த அதிமுகவினரிடம் ஏன் இப்படி இடையூறு செய்கிறீர்கள் என கேட்டேன்.

ஆத்திரமடைந்த அதிமுகவினர் என்னை மிரட்டினர். சிலர் தாக்க வந்தனர். என் கார் மீதும் தாக்குதல் நடத்தியுள்ளனர். இதுகுறித்து தேர்தல் அதிகாரியிடம் புகார் தெரிவித்துள்ளேன். வாக்குச்சாவடிகளில் போதிய பாதுகாப்பு வசதிகள் செய்யப்படவில்லை’’ என்றார்.

அதிமுக கவுன்சிலர் அஞ்சுலட்சுமி கூறும்போது, ‘‘தொகுதி முழுவதும் அமைதியான முறையில் வாக்குப்பதிவு நடைபெற்று வருகிறது. டிராஃபிக் ராமசாமி, தான் செல்லும் இடங்களில் எல்லாம் விளம்பரத்துக்காக பிரச்சினை செய்து வருகிறார். அதிமுக தொண்டர்களிடம் தேவையில்லாமல் தகராறு செய்கிறார். அதனால்தான் அவரை வெளியேறுமாறு தொண்டர்கள் கோஷமிட்டனர்’’ என்றார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x