Published : 26 Jun 2015 10:33 AM
Last Updated : 26 Jun 2015 10:33 AM

வாக்காளர் பட்டியல் குறித்த ‘ஈசி’ திட்டம்: ஆர்.கே.நகரில் அறிமுகப்படுத்தியது தேர்தல் ஆணையம்

வாக்காளர் பட்டியல், வாக்குப்பதிவு மையம் குறித்த விவரங்களை வாக்காளர்கள் வீட்டிலிருந்தபடியே அறிந்து கொள்ளும் ‘ஈசி’ எனும் திட்டத்தை ஆர்.கே.நகர் இடைத்தேர்தலில் தேர்தல் ஆணையம் அறிமுகப்படுத்தியுள்ளது.

சென்னை ஆர்.கே.நகர் தொகுதி இடைத்தேர்தல் வாக்குப்பதிவு நாளை நடக்கிறது. இந்த இடைத்தேர்தலில் பல்வேறு புதிய தொழில்நுட்பங்கள் அறிமுகப்படுத்தப்பட்டு வருகிறது. அந்த வகையில் வாக்காளர்கள் தங்கள் வாக்குப்பதிவு மையம் உள்ளிட்ட விவரங்களை எளிதாக தெரிந்து கொள்ள ‘ஈசி’ எனப்படும் வாக்காளர் உதவி திட்டம் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.

இதுகுறித்து தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சந்தீப் சக்சேனா கூறியதாவது: வாக்காளர்களுக்கு வாக்குப்பதிவு மையத்தின் அமைவிடம் குறித்த வரைபடத்துடன் ‘பூத்’ சிலிப் வழங்கப்பட்டு வருகிறது. தற்போது அவர்களுக்கு மேலும் உதவும் வகையில் ‘ஈசி’ திட்டம் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. இ--நேத்ரா திட்டத்துடன் ஒருங்கிணைந்த இதில், இ-மெயில், எஸ்எம் எஸ் மற்றும் மொபைல்போன் செயலி வழியாக தகவல் பெறலாம்.

ஆண்ட்ராய்டு மொபைல் போன் செயலியில், வாக்காளர்கள் அவர்களது அடையாள அட்டை எண்ணை பதிவு செய்தால், வாக்காளர் பட்டியல் விவரம், வாக்குச்சாவடி மற்றும் அதன் அமைவிட தகவல்கள் கிடைக்கும். அதே போல், epicsearch@chennaicorporation.gov.in என்ற இமெயில் முகவரியிலும், 9444123456 என்ற மொபைல் போன் எண்ணில் எஸ் எம்எஸ் வாயிலாகவும் இந்த தகவல்களை பெறலாம். தற்போது ஆர்.கே.நகர் தொகுதிக்கு மட்டும் அறிமுகப்படுத்தப்பட்டுள்ள இந்த திட்டம், அடுத்த கட்டமாக பொதுத்தேர்தலிலும் அறிமுகப்படுத்தப்படும்.

இதன் மூலம், பூத் சிலிப் கிடைக்காதவர்கள், விவரங்களை சரிபார்த்து, வாக்குச்சாவடி அலுவலர்களிடம் பூத் சிலிப் பெற்றுக் கொள்ளலாம் என்றார்.

வேட்பாளர் செலவுக்கணக்கு

‘ஈசி’ திட்டத்தை அறிமுகப்படுத்திய சந்தீப் சக்சேனாவிடம், ‘முதல்வர் ஜெயலலிதா 22--ம் தேதி மேற்கொண்ட பிரச்சார செலவு வேட்பாளர் கணக்கில் சேர்க்கப்படுமா?’ என்று கேட்கப்பட்டது.

அதற்கு சந்தீப் சக்சேனா பதிலளிக்கையில், “ தேர்தலில் வேட்பாளர்கள் செய்யும் செலவு குறித்து அதற்கென அமைக்கப்பட்டுள்ள செலவின கண்காணிப்பு குழுவினர் கண்காணித்து வருகின்றனர். அவர்கள் அளிக்கும் செலவுக் கணக்கு மற்றும் வேட்பாளர்கள் அளிக்கும் செலவுக் கணக்கு விவரங்கள்

ஒப்பிடப்படும். மேலும், சில ஆதாரங்கள் அடிப்படையிலும் செலவுக் கணக்குகள் ஆய்வு செய்யப்படும்” என்றார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x