Published : 26 Jun 2015 08:44 AM
Last Updated : 26 Jun 2015 08:44 AM

செம்மரம் வெட்ட அழைக்க வந்த இடைத்தரகர்கள் கைது

ஆந்திராவுக்கு செம்மரம் வெட்ட கூலியாட்களை அழைத்துச்செல்ல 3 இடைத்தரகர்களை போலீஸார் நேற்று கைது செய்தனர். இது குறித்து போலீஸ் தரப்பில் கூறியதாவது:

ஆந்திரா மாநிலம், வனப்பகுதியில் செம்மரங்களை வெட்ட வேலூர் மற்றும் திருவண்ணாமலை மாவட்டங்களில் இருந்து கூலியாட்கள் அனுப்பி வைக்கப்படுகின்றனர். இந்நிலையில், ஆம்பூர் நாயக்கனேரி மலைப் பகுதியில் உள்ளவர்களை செம்மரக் கடத்தல் இடைத்தரகர்கள் ஆந்திராவுக்கு மரம் வெட்ட அழைத்துச் செல்ல வந்துள்ளதாக தனிப்படை போலீஸாருக்கு தகவல் வந்தது. உடனே, அங்கு சென்று பார்த்தபோது, நாயக்கனேரி மலைப் பாதையில் இருந்து ஒரே இருசக்கர வாகனத்தில் கீழே இறங்கி வந்த 3 பேரை போலீஸார் மடக்கி விசாரித்தனர்.

திருவண்ணாமலை மாவட் டத்தைச் சேர்ந்த சிவக்குமார், சீக்கஜோனை பகுதியைச் சேர்ந்த குமார், நாயக்கனேரி மலைப் பகுதியைச் சேர்ந்த மற்றொரு சிவக்குமார் என்பதும், இவர்கள் செம்மரக் கடத்தலுக்கு ஆட்களை வேலைக்கு அழைத்துச் செல்லும் இடைத்தரகர்கள் என்பதையும் ஒப்புக்கொண்டனர்.

இதையடுத்து, அவர்களை போலீஸார் கைது செய்தனர். அவர்களிடமிருந்து ரூ.20 ஆயிரம் பணம், இருசக்கர வாகனம், செல்போன்களை பறிமுதல் செய்தனர். பறிமுதல் செய்யப்பட்ட செல்போன்களில் கடைசியாக பதிவான எண்களின் பட்டியலை தயாரித்த போலீஸார், அவர்களிடமும் விசாரணை நடத்த முடிவு செய்துள்ளனர் என்றனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x