Published : 09 Jun 2015 08:59 PM
Last Updated : 09 Jun 2015 08:59 PM

ஆர்.கே.நகர் தொகுதி இடைத்தேர்தலை எதிர்த்து தொடரப்பட்ட வழக்கு தள்ளுபடி

ஆர்.கே. நகர் தொகுதி இடைத்தேர்தலை எதிர்த்து தொடரப்பட்ட வழக்கை சென்னை உயர்நீதிமன்றம் இன்று தள்ளுபடி செய்தது.

இதுதொடர்பாக பொது நல வழக்கிற்கான தமிழக மையத்தின் நிர்வாக அறங்காவலர் கே.கே.ரமேஷ் தாக்கல் செய்த மனுவில், ''சென்னை ஆர்.கே. நகர் தொகுதி அதிமுக எம்.எல்.ஏ. வெற்றிவேல் ராஜினாமா செய்ததால் அங்கு வரும் 27-ம் தேதி இடைத்தேர்தல் நடைபெறுகிறது. இந்த தேர்தலுக்காக மக்களின் வரிப்பணம் கோடிக்கணக்கில் செலவிடப்படவுள்ளது. மக்களின் வரிப்பணத்தை வீணடிக்க அரசுக்கு உரிமை இல்லை.

இந்த தொகுதியில் வெற்றி பெற்ற அதிமுக எம்.எல்.ஏ. வெற்றிவேலின் பதவிக்காலம் முடிவடைய இன்னும் 8 மாதங்களே உள்ளன. இந்த நிலையில், நியாயமில்லாத காரணத்துக்காக அவர் ராஜினாமா செய்திருக்கிறார். அவரது ராஜினாமா கடிதத்தையும் சபாநாயகர் ஏற்றுக் கொண்டுள்ளார். இது மக்கள் பிரதிநிதித்துவ சட்டம் மற்றும் இயற்கை நீதிக்கு எதிரானதாகும். சட்டப்படி அவரது ராஜினாமா ஏற்கத்தக்கதல்ல. நியாயமில்லாத காரணத்துக்காக ராஜினாமா செய்த வெற்றிவேல், இடைத்தேர்தலுக்கான செலவினத்தை செலுத்துமாறு உத்தரவிட வேண்டும். அதுவரை ஆர்.கே.நகரில் இடைத்தேர்தல் நடத்த தடை விதிக்க வேண்டும்.

தேர்தலில் முறைகேட்டைத் தடுக்க மக்கள் பிரதிநிதித்துவ சட்டத்தில் திருத்தம் கொண்டு வந்து நிபுணர் குழுவை ஏற்படுத்த உத்தரவிட வேண்டும்'' என்று மனுவில் கூறப்பட்டிருந்தது.

உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி எஸ்.கே.கவுல், நீதிபதி டி.எஸ். சிவஞானம் ஆகியோர் கொண்ட முதல் அமர்வு இந்த மனுவை விசாரித்து பிறப்பித்த உத்தரவில் கூறியிருப்பதாவது:

மக்கள் பிரதிநிதித்துவ சட்டத்தில் திருத்தம் கொண்டு வர வேண்டும் என்று மனுதாரர் கோரியுள்ளார். சட்டப்பேரவை செய்ய வேண்டியதை நீதிமன்றம் செய்ய வேண்டும் என்று கோருகிறார். சட்டமன்ற உறுப்பினர் ஒருவர் விரும்பி, தனது பதவியை ராஜினாமா செய்வதை நாங்கள் தடுக்க முடியாது. இதுபற்றி மக்கள் என்ன நினைக்கிறார்கள் என்பது வாக்குப்பெட்டியில் பிரதிபலிக்கும். அதனால், இந்த பொதுநல வழக்கை ஏற்க முடியாது. இந்த மனுவை தள்ளுபடி செய்கிறோம்.

இவ்வாறு உத்தரவில் கூறப்பட்டுள்ளது.



FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x