Published : 13 Jun 2015 10:38 AM
Last Updated : 13 Jun 2015 10:38 AM
திராவிட இயக்கத்தால் வளர்ந்த வர்களே, அந்த இயக்கத்தை அழிக்கத் துணைபோவது வேதனையாக இருக்கிறது என்றார் திமுக பொருளாளர் ஸ்டாலின்.
திருச்சியில் நேற்று கட்சிப் பிரமுகர் இல்லத் திருமண விழாவில் அவர் பேசியது: சீர்திருத்த திருமணங்களுக்கு சட்ட அங்கீகாரம் கிடைத்தது திமுக ஆட்சியில்தான்.
தொண்டர்கள் வாக்களித்து என்னை வட்டப் பிரதிநிதியாக தேர்வு செய்தனர். கட்சியில் படிப்படியாக பல்வேறு நிலைகளைத் தாண்டி மாநிலப் பொருளாளராக உயர்ந்துள்ளேன். ஒடுக்கப்பட்ட சமூகத்தினரும் கல்வி பயிலும் வாய்ப்பை உருவாக்கிக் கொடுத்தது திராவிட இயக்கம். இந்த இயக்கத்தால் வளர்ந்தவர்களே இயக்கத்தை அழிக்கத் துணைபோவது வேதனையாக இருக்கிறது என்றார்.
இடைத்தேர்தல் ஆதரவு?
முன்னதாக, திருச்சி விமான நிலையத்துக்கு நேற்றுமுன்தினம் இரவு வந்த ஸ்டாலின், அங்கு செய்தியாளர்களிடம் கூறியது: ஆர்.கே. நகர் இடைத்தேர்தலை திமுக புறக்கணித்துள்ளது. அங்கு போட்டியிடும் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி, இதுவரை திமுகவிடம் ஆதரவு கேட்கவில்லை. ஒருவேளை ஆதரவு கேட்டால், கட்சியின் முடிவை கருணாநிதி அறிவிப்பார்.
ஓ.பன்னீர்செல்வம் ஆட்சியில் மக்களுக்கு ஏதாவது நன்மை கிடைத்ததா, இல்லையா என்பதை மக்கள் மன்றத்தில் பத்திரிகையாளர்கள்தான் விளக்க வேண்டும். சட்டப்பேரவை தேர்தலைச் சந்திக்க திமுக தயாராக உள்ளது. ராமஜெயம் கொலை வழக்கை சிபிஐக்கு மாற்றினால் மட்டுமே உண்மை வெளியே வரும் என்றார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT