Published : 10 Jun 2015 06:53 PM
Last Updated : 10 Jun 2015 06:53 PM
ஜல்லிக்கட்டுக்கான தடையை நீக்கும் மத்திய அரசின் முயற்சிக்கு சமக தலைவர் சரத்குமார் பாராட்டு தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக அவர் இன்று வெளியிட்ட அறிக்கையில், ''தமிழர் திருநாள் மட்டுமின்றி, பல்வேறு கிராமத் திருவிழாக்களில் இடம்பெற்று வந்த ஜல்லிக்கட்டு, மாட்டு வண்டி பந்தயங்களுக்கு தடை விதிக்கப்படுவதால், தமிழக மக்கள் மிகவும் வேதனையுடன் இருந்து வந்தனர். இது தொடர்பாக பல்வேறு போராட்டங்கள் நடத்தப்பட்டன. முந்தைய காங்கிரஸ் அரசு, காட்சிப்படுத்தும் விலங்குகள் பட்டியலில் காளைகளை இணைத்ததால்தான் ஜல்லிக்கட்டுக்கு தடை நீடிக்கும் சூழ்நிலை உருவானது. ஜல்லிக்கட்டு வீரவிளையாட்டை நடத்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என மத்திய அரசை தமிழக அரசு தொடர்ந்து வலியுறுத்தி வந்தது.
இந்நிலையில், ஜல்லிக்கட்டையும் மாட்டு வண்டி பந்தயத்தையும் அனுமதிக்கும் வகையில், காட்சிப்படுத்தப்படும் விலங்குகள் பட்டியலில் இருந்து காளைகளை நீக்குவதற்குத் தேவையான சட்டத் திருத்தங்களை மத்திய வன மற்றும் சுற்றுச்சூழல் துறை மேற்கொள்ள இருப்பதாக அறிவித்து இருப்பது வரவேற்கத்தக்கது. மத்திய அரசுக்கும், தமிழக அரசுக்கும் நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன்'' என்று சரத்குமார் கூறியுள்ளார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT