Published : 05 Jun 2015 08:30 AM
Last Updated : 05 Jun 2015 08:30 AM

செம்மரக் கடத்தல் விவகாரம்: டிஎஸ்பியின் கூட்டாளிகள் 3 பேர் கைது - ஆம்பூர் போலீஸார் நடவடிக்கை

செம்மரக் கடத்தல் வழக்கில் கலால் டிஎஸ்பி தங்கவேலுவுடன் தொடர்பில் இருந்த 3 பேரை ஆம்பூர் போலீஸார் கைது செய்தனர். அவர்களிடம் இருந்து லாரி பறிமுதல் செய்யப்பட்டது.

இது குறித்து போலீஸ் தரப்பில் கூறியதாவது:

ஆம்பூர் பாலூர் பகுதியைச் சேர்ந்த பாமக பிரமுகர் சின்ன பையன் (45) செம்மரக் கடத்தல் விவகாரத்தில் கடந்த 26-ம் தேதி கொலை செய்யப்பட்டார். இது தொடர்பாக பெண் உட்பட 6 பேரை போலீஸார் கைது செய்தனர். செம்மரக் கடத்தல் தொடர்பாக சின்னபையன் கொலை செய்யப்பட்டதாகவும், இந்த வழக்கில் வேலூர் கலால் டிஎஸ்பி தங்கவேலுக்கு முக்கிய தொடர்பு இருப்பதாகவும் கைது செய்யப்பட்டவர்கள் ஒப்புதல் வாக்குமூலம் அளித்தனர்.

இதைத்தொடர்ந்து டிஎஸ்பி தங்கவேலு தலைமறைவானார். அவரைப் பிடிக்க முயன்றபோது அவருடன் கலால் துறையில் பணியாற்றிய 4 போலீஸார் அவருக்கு துணையாக செயல் பட்டு வந்தது தெரியவந்தது. டிஎஸ்பி உத்தரவுக்கு கீழ்படிந்தே நடந்துகொண்டதாக குடியாத்தம் நீதிமன்றத்தில் மாஜிஸ்திரேட் முன் னிலையில் அவர்கள் ஒப்புதல் வாக்கு மூலம் அளித்தனர்.

இதற்கிடையே, தேடப்பட்டு வந்த கலால் டிஎஸ்பி தங்கவேலு செல்போன் நம்பரை ஆய்வு செய்தபோது, கிட்டத்தட்ட 70 செம்மரக் கடத்தல் கும்பலுடன் அவர் தொடர்பில் இருந்தது தெரியவந்தது.

இந்நிலையில், காஞ்சிபுரம் மதுராந்தகம் மாமண்டூர் பகுதியை சேர்ந்த மாரியப்பன் (29), கோபு (28) மற்றும் லோகநாதன் (29) ஆகிய 3 பேரை ஆம்பூர் தாலுகா போலீஸார் நேற்று முன் தினம் இரவு கைது செய்தனர். அவர்களிடமிருந்து செம்மரக் கடத்தலுக்காக பயன்படுத்தப்பட்ட லாரியையும் போலீஸார் பறிமுதல் செய்தனர்.

செம்மரக் கடத்தலில் டிஎஸ்பி தங்கவேலுடன் இணைந்து செயல்பட்டதாகவும், இவர் களைப்போல் மேலும் சிலர் இருப்பதாகவும் கைதானவர்கள் கூறினர். அவர்களிடம் தொடர்ந்து விசாரணை நடந்து வருகிறது என்றனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x