Published : 30 Jun 2015 07:57 AM
Last Updated : 30 Jun 2015 07:57 AM

தமிழகத்தில் அறிவிக்கப்படாத நெருக்கடிநிலை: விஜயகாந்த் குற்றச்சாட்டு

தமிழகத்தில் அறிவிக்கப்படாத நெருக்கடிநிலை நிலவுவதாக தேசிய முற்போக்கு திராவிடர் கழகத் தலைவர் விஜயகாந்த் குற்றம்சாட்டினார்.

காவிரி டெல்டா மாவட்டங்களில் குறுவை சாகுபடிக்கு உரிய நேரத்தில் தண்ணீர் பெற்றுத் தராத தமிழக அரசைக் கண்டித்து, திருவாரூரில் தேமுதிக சார்பில் நேற்று ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதில் விஜயகாந்த் பேசியதாவது:

கடந்த 4 ஆண்டுகளாக குறுவை சாகுபடி இல்லாமல் டெல்டா விவசாயிகள் பெரிதும் பாதிக்கப் பட்டுள்ளனர். தேவையில்லாத பாராட்டு விழாக்களுக்கும், இடைத் தேர்தல்களுக்கும் செலவளித்த கோடிக்கணக்கான ரூபாயை, வறட்சியால் உயிரை விட்டுக் கொண்டிருக்கும் விவசாயிகளுக்கு கொடுத்து புண்ணியம் தேடியிருக் கலாம். வெண்மைப் புரட்சி, பசுமைப் புரட்சியெல்லாம் முடிந்துவிட்டது. தற்போது வறுமைப் புரட்சியும், ஊழல் புரட்சியும்தான் நடக்கிறது.

கர்நாடக அரசு காவிரியில் தண்ணீர் திறந்துவிட்டாலும்கூட, அந்த நீரை தமிழக விவசாயிகள் முழுமையாகப் பயன்படுத்த முடி யாத வகையில் ஆறுகள், கால் வாய்கள், ஏரிகள், குளங்கள் தூர் வாராமல் புதர்மண்டிக் கிடக் கின்றன.

இந்த ஆட்சியில் பால் உற்பத்தி யாளர்கள், கரும்பு விவசாயிகள் என அனைத்துத் தரப்பினருமே பாதிக்கப்பட்டுள்ளனர்.

மத்திய அரசைக் கண்டித்து பக்கம் பக்கமாக எழுதும் ஊடகங் கள், தமிழகத்தில் நிலவும் பிரச்சினைகளை வெளியிட அஞ்சுகின்றன. தமிழகத்தில் அறிவிக்கப்படாத நெருக்கடிநிலை நிலவுகிறது. விவசாயிகள் இறந்து கொண்டிருக்கிறார்கள்.

நான் யாருக்கும் அஞ்சு வதில்லை. ஜெயலலிதாவை சட்டப்பேரவையில் தைரியமாக எதிர்த்தது நான் மட்டுமே என்றார்.

தேமுதிக சட்டப்பேரவை கொறடா வி.சி.சந்திரகுமார், எம்எல்ஏ-க்கள் ஆரணி ஆர்.எம்.பாபு முருகவேல், மேட்டூர் எஸ்.ஆர்.பார்த்திபன், ஆர்.அருள்செல்வன், தேமுதிக திருவாரூர் மாவட்டச் செயலாளர் பாலாஜி, அனைத்து விவசாயிகள் சங்க ஒருங்கிணைப்புக் குழுத் தலைவர் பி.ஆர்.பாண்டியன் உள்ளிட்டோர் பங்கேற்றனர்

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x