Published : 10 Jun 2015 09:54 AM
Last Updated : 10 Jun 2015 09:54 AM
புதுச்சேரி கடற்பகுதியில் காரைக்கால் அருகே நேற்று முன்தினம் இரவு காணாமல்போன இந்தியக் கடலோர காவல் படைக்குச் சொந்தமான ‘டார்னியர்’ ரக சிறிய விமானம் கடலில் விழுந்தது.
சென்னை விமானப்படை தளத்தில் இருந்து கடலோர காவல் படைக்குச் சொந்தமான ‘சிஜி 791’ என்ற ‘டார்னியர்’ சிறிய ரக விமானம் நேற்று முன்தினம் மாலை 6 மணிக்கு தமிழகம் மற்றும் புதுவை கடல் பகுதியில் வழக்கமான கடல் ரோந்துப் பணிக்காக சென்றது.
காரைக்கால் பகுதியில் ரோந்துப் பணியில் ஈடுபட்டிருந்த அந்த விமானம் திடீரென எரிந்து கடலில் விழுந்தது. அந்த விமானத்தில் 2 விமானிகள் உட்பட 3 பேர் இருந்தனர். விமானம் புதுச்சேரியில் இருந்து 16 கடல் மைல் தொலைவில் கடலில் விழுந்ததாக கடற்படை அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.
விமானத்தை தேடும் பணி காலையில் தொடங்கும் என அவர் மேலும் தெரிவித்தார்.
முன்வந்த செய்தி:
8 கப்பல்கள், 2 விமானங்கள் மூலம் தேடும் பணி தீவிரம்:
புதுச்சேரி கடற்பகுதியில் காரைக்கால் அருகே நேற்றுமுன்தினம் 3 பேருடன் காணாமல்போன இந்தியக் கடலோர காவல் படைக்குச் சொந்தமான ‘டார்னியர்’ ரக சிறிய விமானத்தை தேடும் பணியில் 8 கப்பல்கள் மற்றும் 2 விமானங்கள் ஈடுபடுத்தப்பட்டுள்ளன என கடலோர காவல் படையின் கிழக்குப் பிராந்திய ஐ.ஜி. சத்திய பிரகாஷ் சர்மா தெரிவித்துள்ளார்.
சென்னை விமானப்படை தளத்தில் இருந்து கடலோர காவல் படைக்குச் சொந்தமான ‘சிஜி 791’ என்ற ‘டார்னியர்’ சிறிய ரக விமானம் நேற்றுமுன்தினம் மாலை 6 மணிக்கு தமிழகம் மற்றும் புதுவை கடல் பகுதியில் வழக்கமான கடல் ரோந்துப் பணிக்காக சென்றது. காரைக்கால் பகுதியில் ரோந்துப் பணியில் ஈடுபட்டிருந்த இந்த விமானம் திடீரென காணாமல் போனது. அந்த விமானத்தில் 2 விமானிகள் உட்பட 3 பேர் இருந்தனர். விமானத்தை தேடும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது.
இச்சம்பவம் குறித்து கடலோர காவல்படையின் கிழக்குப் பிராந்திய ஐ.ஜி. சத்திய பிரகாஷ் சர்மா நேற்று சென்னையில் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்தார். அப்போது அவர் கூறியதாவது:
ரோந்துப் பணிக்காக கடலோர காவல்படைக்குச் சொந்தமான ‘சிஜி 791’ என்ற ‘டார்னியர்’ சிறிய ரக விமானம் சிதம்பரம் அருகே 16 கடல் மைல் தொலைவில் பறந்து சென்றபோது இரவு 9.23 மணிக்கு திருச்சியில் உள்ள ரேடார் கண்காணிப்பு கருவியில் இருந்து விமானத்தின் தொடர்பு துண்டிக்கப்பட்டது. விமானம் காணாமல் போனது குறித்த தகவல் இரவு 10.45 மணிக்கு எங்களுக்கு கிடைத்தது. இதையடுத்து, உடனடியாக தேடுதல் வேட்டை தொடங்கப்பட்டது.
குறிப்பாக, பிச்சாவரம் சதுப்பு நில வனப்பகுதி அருகே விமானம் காணாமல் போயிருக்கலாம் என சந்தேகிக்கப்படுகிறது.
காணாமல் போன விமானத்தில் விமானி வித்யாசாகர், துணை விமானி சோனி மற்றும் வழிகாட்டி சுபாஷ் சுரேஷ் ஆகிய மூவர் இருந்தனர். ஜெர்மனி நாட்டில் வடிவமைக்கப்பட்ட இந்த சிறிய ரக விமானம் கடந்த ஆண்டு ஜூலை மாதம் கடலோர காவல் படையில் சேர்க்கப்பட்டது.
காணாமல் போன விமானத்தை தேடும் பணியில் கடலோர காவல் படையைச் சேர்ந்த 4 கப்பல்களும், இந்திய கடற்படையைச் சேர்ந்த 4 கப்பல்களும் ஈடுபடுத்தப்பட்டுள்ளன. அத்துடன், ‘பி-8ஐ’ என்ற போர் விமானமும் தேடுதல் பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளது.
அத்துடன் சென்னை, திருச்சி, மதுரை ஆகிய இடங்களில் விமானப் போக்குவரத்துக் கட்டுப்பாட்டு அறையில் உள்ள ரேடார் கருவிகள் மூலமும் தீவிரமாக தேடப்பட்டு வருகிறது. காணாமல் போன விமானம் குறித்து ஏதேனும் தடயம் சிக்கினால் தகவல் அளிக்குமாறு மீனவர்களும் அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.
இவ்வாறு ஐ.ஜி. சத்திய பிரகாஷ் சர்மா கூறினார்.
50 வீரர்கள் தேடுகின்றனர்
கடலோர காவல் படையின் ஏடிஜிபி சைலேந்திரபாபு கூறும் போது, "கடலோர காவல் படைக்கு சொந்தமான 10 படகு களில், படகுக்கு 5 பேர் வீதம் 50 கடலோர காவல் படை வீரர்கள் மாயமான 3 பேரையும் தேடும் பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். விமானத்துடன் அவர்கள் கடலில் விழுந்திருந்தாலும் அவர்கள் உயிர் பிழைத்திருக்க வாய்ப்புள்ளது. கடலில் விமானத்தின் பாகங்கள் ஏதாவது தெரிகிறதா என்றும், மனிதர்கள் யாராவது மிதக் கிறார்களா என்றும் தொடர்ந்து தேடி வருகிறோம்" என்றார்.
ஒத்திகை ஒத்திவைப்பு
2008-ம் ஆண்டு மும்பையில் கடல் வழியாக தீவிரவாதிகள் நுழைந்து தாக்குதல் நடத்தியதைத் தொடர்ந்து 'ஆபரேஷன் அம்லா' என்ற பெயரில் பாதுகாப்பு ஒத்திகைகள் ஆண்டுக்கு 2 முறை நடத்தப்படுகிறது. இந்நிலையில் நேற்று அம்லா ஒத்திகையை நடத்துவதாக இருந்தது. விமானம் மாயமான தகவல் கிடைக்கவே அம்லா பாதுகாப்பு ஒத்திகையை கடலோர காவல் படையினர் ரத்து செய்தனர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT