Published : 10 Jun 2015 09:34 PM
Last Updated : 10 Jun 2015 09:34 PM
திறமை, வெளிப்படைத்தன்மை அடிப்படையில் கல்லூரி பேராசிரியர்களை நியமனம் செய்ய வேண்டும் என தமாகா தலைவர் ஜி.கே.வாசன் கோரிக்கை விடுத்துள்ளார்.
இது தொடர்பாக இன்று வெளியிட்ட அறிக்கையில், ''போட்டித் தேர்வு மற்றும் நேர்காணல் அடிப்படையில் பாலிடெக்னிக், பொறியியல் மற்றும் மருத்துவக் கல்லூரிகளில் உதவி, இணை போராசிரியர்கள் மற்றும் பேராசிரியர்களை தமிழக அரசு நியமனம் செய்து வருகிறது. அரசுப் பள்ளிகளில் தகுதித் தேர்வுகள் மூலம் ஆசிரியர்களை தேர்வு செய்கிறார்கள்.
ஆனால், பல்கலைக்கழகங்கள், அரசு கலை, அறிவியல் கல்லூரிகள், அரசு உதவிபெறும் கல்லூரிகளில் உதவி, இணை பேராசிரியர்கள் மற்றும் பேராசிரியர்கள் நியமனத்துக்கு போட்டித் தேர்வு நடத்தப்படுவதில்லை. நேர்முகத் தேர்வு மூலம் தன்னிச்சையாக மதிப்பெண்கள் வழங்கி நியமனம் செய்கிறார்கள். இதில் வெளிப்படைத்தன்மையை உறுதி செய்ய நேர்முகத் தேர்வு மதிப்பெண்கள், தரவரிசைப் பட்டியலை வெளியிடச் செய்ய வேண்டும்.
மேல்நிலைப் பள்ளி ஆசிரியர் தேர்வில் பணி அனுபவத்துக்கு அதிகபட்சமாக 3 மதிப்பெண்கள் மட்டுமே வழங்கப்படுகிறது. ஆனால், அரசு கலை, அறிவியல் கல்லூரிகளில் உதவிப் பேராசிரியர் நியமனத்தில் பணி அனுபவத்துக்கு அதிகபட்சமாக 15 மதிப்பெண்கள் வழங்கப்படுகிறது. இதனையும் மறுபரிசீலனை செய்ய வேண்டும்.
அரசு உதவிபெறும் கல்லூரிகள், சுயநிதி கல்லூரிகள், பல்கலைக்கழக உறுப்புக் கல்லூரிகளில் காலியிடங்களுக்கு போட்டித் தேர்வுகள் நடத்தி, கல்வித் தகுதியின் அடிப்படையில் பேராசிரியர்களை நியமனம் செய்ய வேண்டும். அரசு கல்லூரிகளில் பெற்றோர் ஆசிரியர் கழகம் மூலம் பணியாற்றிய பேராசிரியர்களுக்கு அனுபவச் சான்று வழங்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்'' என வாசன் வலியுறுத்தியுள்ளார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT