Published : 04 Jun 2015 11:10 AM
Last Updated : 04 Jun 2015 11:10 AM

பூரண மதுவிலக்கு கோரி த.மா.கா. நாளை கண்டன ஆர்ப்பாட்டம்

தமிழகத்தில் பூரண மதுவிலக்கை அமல்படுத்தக் கோரி தமிழ் மாநில காங்கிரஸ் கட்சி சார்பில் நாளை (வெள்ளிக்கிழமி) மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

நாளை அனைத்து மாவட்ட தலைநகரங்களிலும் இந்த ஆர்ப்பாட்டம் நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

இது தொடர்பாக அக்கட்சி வெளியிட்டுள்ள அறிக்கையில், "தமிழ் மாநில காங்கிரஸ் கட்சியின் பொதுக்குழுவில் பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டு அதனடிப்படையில் மக்களை பாதிக்கும் எந்த ஒரு பிரச்சினையாக இருந்தாலும் அதற்காக ஆர்ப்பாட்டங்களும், போராட்டங்களும் நடந்த தீர்மானித்தோம்.

குடி குடியைக் கெடுக்கும், மது மதியைக் கெடுக்கும் என்பதால் தான் அன்றைக்கே காமராஜர் ஆட்சியில் மதுவிலக்கை முழுமையாக அமல்படுத்தினார்.

ஆனால், தற்போது தமிழகத்தில் 5 மண்டலங்களுக்கு உட்பட்ட 33 மாவட்டங்களில் கிட்டத்தட்ட 6,800 மதுக்கடைகளில் 30 ஆயிரம் வேலையாட்கள் பணிபுரிகின்றனர்.

இதன் மூலம் தமிழக அரசு கடந்த வருடம் 25,000 கோடி வருமானம் ஈட்டியிருந்தது.

ஆனால், மதுவால் கிடைக்கும் வருமானம் மட்டுமே குறிக்கோள் என்ற நிலை மாற வேண்டும், ஏனென்றால் மதுவினால் வரும் வருமானத்தை விட அதனால் விளையும் பாதிப்புகள் தான் அதிகம்.

மது இல்லாத சமுதாயம் உருவானால் தமிழகத்தில் குற்றங்கள், கற்பழிப்புகள், கொடுமைகள் குறைந்து சட்டம் ஒழுங்கு சீராகும். மேலும், ஏழை, எளிய குடும்பங்களும் மதுக் கொடுமையிலிருந்து காப்பாற்றப்படுவார்கள். தமிழக அரசும் மருத்துவ செலவுக்கு செலவிடும் தொகை குறையும்.

இவற்றை கருத்தில் கொண்டு மக்களுக்கும், அரசுக்கும் விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் இந்த பூரண மதுவிலக்குப் போராட்டம் அமையும்.

தமிழக அரசு அனைத்துப் பகுதிகளிலும் உள்ள மதுக்கடைகளையும் மூட வேண்டும். அதில் பணியாற்றும் அனைத்து தொழிலாளர்களையும் வேறு துறைக்கு மாற்ற வலியுறுத்துவோம்" எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x