Published : 11 Jun 2015 08:09 AM
Last Updated : 11 Jun 2015 08:09 AM
ரயில் தண்டவாளம் அருகே சடலமாக கிடந்த தொழிலதிபர் ஒருவர், கொலை செய்யப்பட்டு வீசப்பட்டதாக குற்றம்சாட்டியும், மர்மநபர்களைக் கைது செய்யக் கோரியும் பொதுமக்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர். திருவள்ளூர்- பூந்தமல்லி நெடுஞ் சாலையில் 3 மணி நேரத்துக்கு மேலாக சாலை மறியல் நீடித்ததால் போலீஸார் அவர்களை தடியடி நடத்தி கலைத்தனர். ஆவேச மடைந்த சிலர் போலீஸார் மீது கற்களை வீசி தாக்கினர்.
திருவள்ளூர் மாவட்டம் திரு நின்றவூர் அருகே உள்ள கொட்டாம் மேடுவைச் சேர்ந்தவர் முரளி (48). இவர் செங்கல்சூளைகளையும், புதுசத்திரத்தில் பெட்ரோல் பங்க், குடிநீர் மற்றும் உணவுப் பொருட் கள் ஆய்வுக்கூடம் ஆகிய வற்றையும் நடத்தி வந்தார்.
நிலத்தகராறால் முன்விரோதம்
இந்நிலையில், புதுசத்திரத்தில் 7 ஆண்டுகளுக்கு முன்பு முரளி வாங்கிய 10 சென்ட் நிலம் தனக்கு சொந்தமானது எனக் கூறி, சென்னை- போரூரைச் சேர்ந்த ஒருவர், அந்த நிலத்தை ஆக்கிரமித்ததாக கூறப்படுகிறது.
இரு தரப்பினரையும் அழைத்து வெள்ளவேடு போலீ ஸார் நேற்று முன்தினம் விசாரணை நடத்தினர். அவ்விசாரணையில், சம்பந்தப்பட்ட நிலம் முரளிக்கு சொந்தமானது எனத் தெரிய வந்துள்ளது. முரளியின் நிலத்தில் போடப்பட்ட கொட்டகையினை அகற்றுமாறு வெள்ள வேடு போலீஸார் எதிர் தரப்பினரை அறிவுறுத்தியுள்ளனர்.
கொலை செய்யப்பட்டாரா?
இந்நிலையில், நேற்று முன்தினம் நள்ளிரவு முரளிக்கு சொந்தமான பெட்ரோல் பங்கில் புகுந்த மர்ம நபர்கள், ஊழியர்கள் 4 பேரை தாக்கியுள்ளனர். நேற்று காலை 6.15 மணியளவில் கொட் டாம்மேடு பகுதியில் உள்ள தனது செங்கல்சூளைக்கு முரளி மோட்டார் சைக்கிளில் சென்று கொண்டிருந்தார். அப்போது, கார் ஒன்றில் வந்த மர்ம நபர்கள், முரளியை கடத்திச் சென்றதாக கூறப்படுகிறது. இந்நிலையில், நேற்று காலை 7.15 மணியளவில் செவ்வாய்ப்பேட்டை ரயில் நிலையம் அருகே தலையில் காயங்களுடன் முரளி சடலமாக கிடந்துள்ளார்.
திருவள்ளூர் ரயில்வே போலீ ஸார், சடலத்தை கைப்பற்றி, விசாரணை நடத்தி வருகின்றனர். முதல் கட்ட விசாரணையில் சென் னையிலிருந்து, திருவள்ளூர் நோக்கி வந்த மின்சார ரயிலில் அடிபட்டு இறந்ததாக ரயில்வே போலீஸார் தரப்பில் கூறப் படுகிறது.
3 மணி நேர சாலை மறியல்
தகவலறிந்த கொட்டாம் மேடு பொதுமக்கள் 200-க்கும் மேற்பட்டோர் காலை 10.30 மணியளவில், புதுசத்திரம் திருவள்ளூர்- பூந்தமல்லி நெடுஞ் சாலையில் திரண்டனர். ‘முரளி கொலை செய்யப்பட்டு, ரயில் தண்டவாளத்தில் வீசப்பட்டுள்ளார். ஆகவே கொலையாளிகளை கைது செய்யவேண்டும்’ என வலியு றுத்தி அவர்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர்.
சார் ஆட்சியர் ராகுல்நாத், எஸ்.பி. சாம்சன் உள்ளிட்ட அதிகாரிகள் பேச்சுவார்த்தை நடத்தினர். எனினும் சாலை மறியல் 3 மணி நேரத்துக்கு மேலாக நீடித்த தால் திருவள்ளூர்- பூந்த மல்லி நெடுஞ்சாலையில் போக்கு வரத்து ஸ்தம்பித்தது. இதை யடுத்து, போலீஸார் தடியடி நடத்தி மறியலில் ஈடுபட்டவர்களை கலைத்தனர். இதனால், ஆவேச மடைந்த போராட்டக் காரர் களில் சிலர், போலீஸார் மற்றும் செய்தியாளர்கள் மீது கல் வீசினர். புதுசத்திரம் மற்றும் கொட்டாம்மேடு பகுதியில் பதற்ற மான சூழல் நிலவுவதால், போலீ ஸார் குவிக்கப்பட்டுள்ளனர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT