Published : 15 Jun 2015 08:18 AM
Last Updated : 15 Jun 2015 08:18 AM
‘சென்னையில் அரசு இடம் ஒதுக்கி 13 ஆண்டுகள் ஆகியும், அந்த இடத்தில் சிவாஜி மணிமண்டபம் கட்டவில்லை. தென்னிந்திய நடிகர் சங்கம் சார்பில் மணி மண்டபம் கட்டப்படும் என்ற நம்பிக்கை போய்விட்டது. எனவே அரசே மணிமண்டபம் கட்ட வேண்டும்’ என மாநில சிவாஜி சமூகநலப் பேரவை தலைவர் கே.சந்திரசேகரன் கேட்டுக்கொண்டுள்ளார்.
சிவாஜி சமூகநலப் பேரவை ஆலோசனைக் கூட்டம் மதுரையில் நேற்று நடைபெற்றது. அதன் தலைவர் கே.சந்திரசேகரன் தலைமை வகித்தார். பின்னர் அவர் செய்தியாளர்களிடம் கூறியதாவது:
சென்னை அடையாறு சத்யா ஸ்டூடியோ எதிரே சிவாஜி மணிமண்டபம் கட்டுவதற்காக தென்னிந்திய நடிகர் சங்கத்துக்கு 65 சென்ட் இடத்தை தமிழக அரசு இலவசமாக ஒதுக்கி 2002-ல் அரசாணை பிறப்பித்தது. அங்கு சிவாஜி மணிமண்டபம் கட்டுவதற்கு நடிகர் சங்கம் இதுவரை நடவடிக்கை எடுக்கவில்லை. அந்த இடத்தையும் அரசிடம் இருந்து முறைப்படி பெறவில்லை. தற் போது வரை அந்த இடம் பொதுப் பணித் துறை வசம்தான் உள்ளது.
கடந்த 2005-ம் ஆண்டு நடிகர் சங்கத் தலைவராக விஜயகாந்த் இருந்தபோது, மணிமண்டபம் கட்டுவதற்கு பூமிபூஜை போடப்பட்டது. அதன் பிறகு எந்தப் பணியும் நடைபெறவில்லை. அங்கு சிவாஜிக்கு மணிமண்டபம் கட்டுவார்கள் என தென்னிந்திய நடிகர் சங்கம் மீது எங்களுக்கு நம்பிக்கை இல்லை.
சிவாஜி பிறந்தநாளை நடிகர் தினமாக கொண்டாடுவதாக அறிவித்து, ஒரு ஆண்டு மட்டும் கொண்டாடினர். அதன்பிறகு விட்டுவிட்டனர். தன்னுடைய நடிப்பால் தமிழகத்துக்கு சிறப்பு சேர்த்தவர் சிவாஜி. கர்நாடகாவில் நடிகர் ராஜ்குமார் மறைந்த ஓராண் டில் அம்மாநில அரசால் மணிமண்டபம் கட்டப்பட்டது. நடிகர் விஷ்ணுவர்த்தன் மறைந்த சில நாளில் அவருக்கு மணிமண்டபம் கட்ட கர்நாடக அரசு ரூ.10 கோடி ஒதுக்கியது. யாரும் கேட்காமலேயே கன்னட நடிகர்களுக்கு அம்மாநில அரசு சிறப்பு செய்கிறது.
சிவாஜிக்கு சிறப்பு செய்யும் வகையில் தமிழக அரசே சிவாஜிக்கு மணிமண்டபம் கட்ட வேண்டும். இந்த கோரிக்கையை வலியுறுத்தி சென்னை சேப்பாக்கம் அரசினர் விருந்தினர் மாளிகை அருகில் சிவாஜி நினைவு நாளான ஜூலை 21-ம் தேதி உண்ணாவிரதம் நடத்தப்படும் என்றார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT