Published : 25 May 2015 10:28 AM
Last Updated : 25 May 2015 10:28 AM

மாயமான மீனவர்களை கண்டுபிடிக்கக் கோரி 2-வது நாளாக மறியல் ஹெலிகாப்டர், கப்பல் மூலம் தேடும் பணி தீவிரம்

கடலுக்குள் மீன் பிடிக்கச் சென்று மாயமான 5 மீனவர்களை கண்டுபிடிக்கக் கோரி காசிமேட்டில் மீனவர்கள் 2-வது நாளாக நேற்றும் மறியலில் ஈடுபட்டனர்.

சென்னை காசிமேடு ஜீவரத்தினம் நகர் பகுதியை சேர்ந்தவர்கள் கடும்பாடி, மாயாண்டி, சக்திவேல், மணி, சுரேஷ். இவர்கள் 5 பேரும் கடந்த 22-ம் தேதி மதியம் பைபர் படகில் மீன் பிடிக்க கடலுக்குள் சென்றனர். அன்றிரவு 12 மணிக்கு அவர்கள் கரை திரும்பியிருக்க வேண்டும். ஆனால், மறுநாள் மாலை வரை அவர்கள் கரை திரும்பவில்லை.

இதுகுறித்து மீன் வளத்துறைக்கும், கடலோரக் காவல் படைக்கும் மீனவர்கள் தகவல் கொடுத்தனர். துறைமுகம் காவல் நிலையத்திலும் புகார் கொடுத்தனர். மாயமான மீனவர்களைத் தேடும் பணியை உடனே தொடங்காததால் ஆத்திரமடைந்த மீனவர்கள் காசிமேடு சிக்னல் அருகே நேற்று முன்தினம் மறியல் செய்தனர். அவர்களை சமாதானப்படுத்திய அதிகாரிகள், உடனடியாக மீனவர்களை தேடும் பணியில் ஈடுபட்டனர்.

ஹெலிகாப்டர் மற்றும் கடலோரக் காவல் படை கப்பல் மூலம் மீனவர்களை தேடும் பணி 2 நாட்களாக நடந்து வருகிறது. ஆனால், மீனவர்களைப் பற்றி எந்த தகவலும் கிடைக்கவில்லை. அந்த வழியாக வரும் கப்பல்களுக்கும் தகவல் கொடுக்கப்பட்டு கடல் பகுதியில் தேடுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளதாக கடலோரக் காவல் படையினர் தெரிவித்தனர்.

இந்நிலையில், காசிமேடு மீனவர்கள் 2-வது நாளாக நேற்று காலையும் மறியல் செய்தனர். அவர்களை போலீஸார் சமாதானப்படுத்தி கலைந்துபோகச் செய்தனர்.

இதுகுறித்து மீனவர்கள் கூறும் போது, ‘‘விசைப்படகில் கடலுக்குள் சென்று மாயமானவர்களை தேடுகிறோம் என்று மீன்வளத்துறை அதிகாரிகளிடம் கேட்டோம். தற்போது மீன் பிடி தடைக்காலம் என்பதால் விசைப்படகுகள் கடலுக்குள் செல்லக்கூடாது என்று கூறி அனுமதி மறுத்துவிட்டனர்’’ என்றனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x