Published : 27 May 2015 09:05 PM
Last Updated : 27 May 2015 09:05 PM
சேலம் திமுக மாமன்ற உறுப்பினர் தெய்வலிங்கத்தை தாக்கிய அதிமுகவினரை உடனே கைது செய்ய வேண்டும் என்று திமுக பொருளாளர் ஸ்டாலின் கூறியுள்ளார்.
இதுகுறித்து இன்று ஸ்டாலின் எழுதியுள்ள முகநூல் பதிவில், ''சேலம் மாநகர மன்றத்தில் இன்றைய தினம் வெட்கித் தலைகுனியும் அளவிற்கு ஜனநாயகம் புதைகுழிக்கு அனுப்பப்பட்டுள்ளது.
திமுக மாநகர மன்ற உறுப்பினர் தெய்வலிங்கத்தின் மீது மிருகத்தனமான தாக்குதல் நடத்தப்பட்டு, அவர் மரண வாயிலில் இருந்து தப்பித்துள்ளார். மாநகர் மன்றத்தில் பத்து நிமிடத்திற்கும் மேல் தங்கள் தலைவியின் புகழை மட்டுமே பாடிக் கொண்டிருந்த அதிமுக மாமன்ற உறுப்பினர்களிடம், "இனி மக்கள் பிரச்சினை பற்றி பேசலாமே" என்று கோரிக்கை வைத்தது தான் திமுக மாநகர் மன்ற உறுப்பினர் தெய்வலிங்கம் செய்த குற்றம்.
மாமன்றத்திற்குள் மட்டுமின்றி, திமுக மாமன்ற உறுப்பினரை தெருவரைக்கும் விரட்டி வந்து மிருகத்தனமாக அதிமுகவினர் தாக்குதல் நடத்தி, அராஜகத்தை கட்டவிழ்த்து விட்டுள்ளார்கள்.இந்த தாக்குதல் அனைத்தும் காவல்துறையின் கண் முன்னே நடைபெற்றும், அதை தடுக்காமல் வேடிக்கைப் பார்த்துக் கொண்டிருந்திருக்கிறது என்பது வேதனையளிக்கிறது.
நாகரீகமான சமுதாயத்தில் அனுமதிக்கக் கூடிய அனைத்து எல்லைகளையும் ஆளுங்கட்சியினரின் இந்த அநாகரீகமான, அருவருக்கத்தக்க நடவடிக்கை தாண்டி விட்டது. திமுக மாமன்ற உறுப்பினரை தாக்கிய கிரிமினல்கள் மீது உடனடி நடவடிக்கை எடுத்து, அவர்களை காவல்துறை கைது செய்ய வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறேன்.
அப்படி கைது செய்யாவிட்டால் தாக்குதலில் ஈடுபட்ட கிரிமினல்களை சட்டத்தின் முன் நிறுத்துவதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும் என்பதையும் தெரிவித்துக் கொள்ள விரும்புகிறேன்.
இன்று சேலத்தில் நடைபெற்றுள்ள அதிமுகவினரின் அராஜகங்கள் தமிழகத்தில் ஜனநாயகம் இருக்கிறதா அல்லது கொடுங்கோலான சர்வாதிகாரம் குடி கொண்டிருக்கிறதா என்ற அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது'' என்று ஸ்டாலின் கூறியுள்ளார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT